2 "அன்பும்" அவருக்கு முக்கியம்.. விட்டுட மாட்டார்.. ஸ்டாலின் செய்த மரியாதை.. உணர்ச்சிவசப்பட்ட தலைகள்
சென்னை: திமுகவில் இன்று அறிவிக்கப்பட்ட 173 வேட்பாளர்களில் 2 பேரின் பெயர் மட்டும் திமுகவினர் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த இரண்டு பெயர்களை பார்த்து திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
திமுக சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் 173 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 2 நாள் கழித்து தற்போது திமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் மொத்தம் 187 இடங்களில் உதய சூரியன் சின்னம் போட்டியிட உள்ளது.

வாய்ப்பு
திமுக சார்பாக இந்த முறை சீனியர்கள், இளம் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவில் சீனியர் உறுப்பினர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிட உள்ளனர். எந்த வகையிலும் வெற்றி வாய்ப்பை இழந்து விட கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்து உள்ளது.

இரண்டு பேர்
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 2 பேரின் பெயர் திமுகவினர் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பேராசிரியர் அன்பழகனின் பேரன் அ.வெற்றி அழகன் வில்லிவாக்கத்தில் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் தி நகர் தொகுதியில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி போட்டியிடுகிறார்.

உறுதி அளித்து இருந்தார்
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சேப்பாக்கத்தின் எம்எல்ஏவாக இருந்து கொரோனா காரணமாக மரணம் அடைந்தார். அப்போதே அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தது. அதேபோல் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவின் போதும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.

வாய்ப்பு
தற்போது திமுகவினர் எதிர்பார்த்தது போலவே திமுகவின் இரண்டு மறைந்த மூத்த தலைவர்களின் உறவினர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதிக்கு சேப்பாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில் அங்கு உதயநிதி போட்டியிடுவதால் தி நகர் தொகுதி வழங்கப்பட்டு உள்ளது.

அன்பழகன்
இது குறித்து பேசிய திமுக நிர்வாகிகள்.. இரண்டு பேருக்கும் இடம் கிடைத்தது சந்தோசம்தான். இரண்டு அன்பழகனின் உறவினர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுகவிற்காக உழைத்தால் உங்களை கைவிட்டுவிட மாட்டார்கள். அதற்கு இதுதான் உதாரணம்... ஸ்டாலின் அவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்துள்ளார், என்று பூரிப்பாக பேசி உள்ளனர். இவர்கள் இருவரையும் வெற்றிபெற வைக்க திமுகவில் பெரிய குழுவே வேலை பார்க்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications