ஆசிரமத்தில் பாலியல் தொல்லை.. சாட்டையை சுழற்றிய மாநில மனித உரிமைகள் ஆணையம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்!
சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்துள்ள நிலையில் மாவட்ட கலெக்டர், எஸ்பிக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானவர்கள் இருந்தனர்.
இந்நிலையில் ஆசிரமத்தில் இருந்தவர்களை துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. மேலும் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மாயமானதாகவும் புகார்கள் எழுந்தன.

பாலியல் தொல்லை-குரங்கு கடி
இதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், குரங்குகளால் கடிக்க விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் என மொத்தம் 9 பேரை கைது செய்தனர். மேலும் இந்த ஆசிரமம் தொடர்பாக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐ.டி எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமையிலான போலீசார் அன்புஜோதி ஆசிரமத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். விழுப்புரம் மண்டல தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் இணைந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்புச்சங்கிலிகள், மூங்கில் பிரம்புகள், ரத்தக்கறை படிந்த பாய்கள், முத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மனித உரிமைகள் ஆணையம் வழக்கு
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விரிவான அறிக்கை
அதன்படி அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications