90% அரசு ஊழியர் ஓட்டு அதிமுகவுக்கே.. 2 மாசத்துல எடப்பாடி தான் சிஎம்! கான்ஃபிடன்டாக பேசிய அன்புமணி!
சென்னை: 90 விழுக்காடு அரசு அதிகாரிகள் அதிமுக கூட்டணிக்கு தான் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள், ஏனென்றால் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டார்கள் எனவும், இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இபிஎஸ் பதவி ஏற்க இருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
2026 தமிழக சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர்," இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இபிஎஸ் பதவி ஏற்க இருக்கிறார். சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்
அந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், 361 பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2100 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஐந்தாண்டு காலத்திலே 8,700 பேர் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 62 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று உள்ளது.
அரசு ஊழியர் ஓட்டு
அதில் 27 ஆயிரம் வழக்குகள் போக்ஸோ வழக்குகள். 44 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான கொடுமை சம்பந்தப்பட்ட வழக்குகள். 90 விழுக்காடு அரசு அதிகாரிகள் அதிமுக கூட்டணிக்கு தான் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டது.
அதிமுக கூட்டணி
4800 அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. அதிமுக கூட்டணிக்கு சாதகமாக தான் திமுக கூட்டணியில் உள்ள பிரேமலதா வேலை செய்து கொண்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் எனவும் பிரேமலதா பேசியுள்ளார்.
திமுக ஆட்சி
தமிழகத்தில் தீய திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்.இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகளை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் மோசடிகளும் உலக வரைபடத்தின் பரப்பளவை விட நீளமானவை.
தாய்மார்களே, பெண்களே, பெற்றோர்களே திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள். ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போட கூடாது என தாய்மார்களின் பாதம் தொட்டு கேட்கிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக ஆட்சியை தூக்கி வீசுங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications