நியாயமே இல்ல.. இந்த நேரத்துல இது தேவையா? மின் கட்டண உயர்வு - அன்புமணிக்கு வந்துச்சே கோபம்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளதாகவும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்று அறிவித்தார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.
இதையடுத்து புதிய மின் கட்டணத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளித்தது. தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வால் வீடு, கடை வாடகை, சிறுகுறு தொழில் பாதிப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டது.

இன்று முதல்
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய மின் கட்டண உயர்வு 2026 - 27 நிதியாண்டு வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது!

நியாயமல்ல
மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல!

திரும்பப்பெற வேண்டும்
மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!" என்றார்.












Click it and Unblock the Notifications