நீட் விவகாரத்தில் சொந்த கருத்தை திணிக்காதீர்.. ஆளுநர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. அன்புமணி
சென்னை: நீட் விவகாரத்தில் ஆளுநர் சொந்த கருத்தை திணிக்கவே கூடாது, இத்தோடு இது போன்ற பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகா அரசு அடாவடித்தனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
காவிரி படுகையில் அணைகளில் நிரம்பி இருக்கிறது. 84 சதவீதம் நீர் இருக்கிறது. இங்கு நமக்கு வறட்சி இருக்கிறது. இவ்வளவு தண்ணீர் வைத்து கொண்டு கொடுக்காத கர்நாடகா அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். இப்போதே கர்நாடகா அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.
இப்போதே கர்நாடகா தண்ணீரை தராத சூழலை நம்மால் சமாளிக்க முடியவில்லை. மேகதாது அணையை கட்டினால் தண்ணீர் கிடைக்காது. எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டும். நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. சின்னத்துரைக்கு பள்ளியில் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
பள்ளிகள் அருக போதை பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும். என்எல்சி விவகாரத்தில் நாங்கள் உணர்வுப்பூர்வமாக போராடி வருகிறோம். 65000 ஏக்கர் விளை நிலங்களை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இதில் 40000 ஏக்கர் நிலங்ளை அழித்து விட்டார்கள். சோறு போடும் புண்ணிய பூமி.
என்எல்சி தமிழகத்தை விட ஆந்திரா, கர்நாடகாவுக்குத்தான் மின்சாரத்தை அதிகமாக கொடுக்கிறது. அதாவது நம் மண்ணை அழித்து அவர்களுக்கு ஏன் மின்சாரம். மின்மிகை மாநிலமான தமிழகத்திற்கு எதற்கு என்எல்சி. நீட் மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் அவரது சொந்த கருத்தை திணிக்கக் கூடாது.
நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது மக்களுடைய விருப்பம். தமிழகத்தில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் வேண்டாம் என்கிறார்கள். 7.5 சதவீத இடஒதுக்கீடு இல்லைன்னா அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இடம் கிடைத்திருக்காது. நீட் பயிற்சி மையங்களை தமிழகத்திலிருந்து மூட வேண்டும். எனவே ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications