அன்புமணி டிஸ்மிஸ் சட்டப்பூர்வமாக அறிவிப்பு? தைலாபுரத்தில் திடீர் பாமக பொதுக்குழு- ராமதாஸ் ஆலோசனை!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவராக தாமே தொடர்ந்து நீடிக்கிறேன் என அறிவித்த அன்புமணியை கட்சியின் பொதுக்குழுவை கூட்டி சட்டப்படி நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டார் அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ். பாமகவின் பொதுக்குழுவை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திலேயே கூட்டுவது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். பாமகவின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டி இந்த முடிவை அறிவித்தார் அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ். மேலும் பாமகவின் தலைவராக இருந்த ஜிகே மணி, கவுரவுத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
பாமகவில் தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி அதிகாரம் யாருக்கு என்பதில் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தன. டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி வேண்டாம்; அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்கிற நிலைப்பாடு கொண்டவர்; அன்புமணி ராமதாஸோ எப்படியாவது ராஜ்யசபா எம்பி பதவி மூலம் மீண்டும் மத்திய அமைச்சராகித்தான் ஆக வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர்.
அத்துடன் பாமக என்ற கட்சியே இனி தம்முடைய கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் அன்புமணி.
அன்புமணியின் போக்கை பலமுறை பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் விமர்சித்திருந்தார் ராமதாஸ். அண்மையில் பாமக பொதுக் குழுவில் இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. ராமதாஸின் பேரனை, பாமக இளைஞரணிச் செயலாளராக நியமித்தார் ராமதாஸ். இதனை பொதுக்குழு மேடையிலேயே கடுமையாக எதிர்த்தார் அன்புமணி ராமதாஸ். இப்படியான மோதல் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் திடீரென பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பாமகவின் செயல் தலைவராக மட்டுமே அன்புமணி இருப்பார் என அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.
ஆனால் அன்புமணியோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், நானே பாமக தலைவர்; பாமக பொதுக்குழுதான் என்னை தேர்ந்தெடுத்தது; தேர்தல் ஆணையமும் என்னையே பாமக தலைவராக அங்கீகரித்துவிட்டது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அன்புமணியின் அறிக்கையை முன்வைத்தும் விவாதம் நடத்தப்பட்டது. இதனடிப்படையில் பாமகவின் பொதுக்குழுவை தமது தைலாபுரம் தோட்டத்திலேயே கூட்டுவது என ராமதாஸ் முடிவு எடுத்துள்ளாராம். இந்த பொதுக்குழுவில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்துவது என்பதுதான் ராமதாஸின் முடிவாம்.












Click it and Unblock the Notifications