என் மனதில் இருக்கும் வெறி.. ராமதாஸ் தான் காரணம்! வெடிக்க போகும் பெரும் போராட்டம்..அன்புமணி வார்னிங்
சென்னை: தமிழக அரசு சாதிவாரி சர்வே உடனே எடுக்க வேண்டும் இல்லை என்றால் விரைவில் பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் பேசுவது பொய் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், என்னுடைய மனதில் சமூக நீதி வெறி உள்ளது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ் எனவும் கூறியுள்ளார்.
பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா ஆணை முத்துவின் நூற்றாண்டு விழா பாமக சார்பில் சென்னை தியாகராய நகரில் நடத்தப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி," பெரியாரின் தொண்டரான அய்யா ஆனைமுத்து சமூக நீதிக்காக இட ஒதுக்கீட்டிற்காக பல ஆண்டுகள் உழைத்தவர். இந்தியா முழுவதும் பயணித்து இதற்காக பல தலைவர்களை சந்தித்து இறுதிவரை போராடியவர்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்த வேண்டும் என மிக தீவிரமாக போராடியவர் ஐயா ஆனைமுத்து. ஐயா ஆணைமுத்துவுக்கு பாமக சார்பில் சிலை அமைக்கப்படும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமூகநீதி குறித்த புரிதல் இல்லை சமூகநீதி போராட்ட வரலாறுகள் தெரியவில்லை. அவற்றைத் தெரியப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. என்னுடைய மனதில் சமூக நீதி வெறி உள்ளது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ்.
அவரைப் பார்த்து பார்த்து தான் நான் வளர்ந்தேன். சமூக நீதியை டாக்டர் ராமதாஸ் இடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். EWS இட ஒதுக்கீடு தவறு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5% EWS வழங்கப்படுகிறது. அவர்களின் மொத்த மக்கள் தொகையை 7% தான். அதில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் 0.5% தான். ஆனால் அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை
ஆனால் வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது. இதைப் பற்றி பேச வேண்டுமானால் இரண்டு மணி நேரம் பேசுவேன் அவ்வளவு தரவுகள் உள்ளது. பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துவதாக அன்புமணி குற்றச்சாட்டு. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். ஒரு மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாதி கணக்கெடுப்பை எடுக்கலாம்.
கர்நாடகா, பீகார், ஒடிசா போன்ற பல மாநிலங்கள் அவ்வாறு கணக்கெடுப்பை எடுத்துள்ளன. அவ்வாறு கணக்கெடுப்பு எடுத்தால் தான் இன்னும் இட ஒதுக்கீடு முழுமையாக சென்று சேராத சமூகங்களுக்கும் சென்று சேரும். ஆனால் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள்; ஓட்டு போட மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலை வாய்ப்பு வேண்டும் அதற்கு முறையான கணக்கெடுப்பு வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சரை ஐந்து முறை சந்தித்து பத்து புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வலியுறுத்தினோம். தொடர்ந்து வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இறுதிவரை அதனை நிறைவேற்றவில்லை. திமுக அரசு வழக்கறிஞர்கள் சரியாக வாதங்களை வைக்காத காரணத்தினால் தான் நீதிமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசிடம் இருக்கும் தரவுகளை சமர்ப்பித்தால் மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு சாத்தியமாகும். ஆனால் அதனை செய்ய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயாராக இல்லை.
இட ஒதுக்கீட்டிற்காக மீண்டும் தமிழக அளவில் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
பாமக விடம் தற்போது அதிகாரம் இல்லை. அதிகாரம் இருக்கும் முதலமைச்சர் தன்னிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். கர்நாடகா பீகார் ஒடிசா போன்ற மாநில முதலமைச்சர்கள் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் போது, தமிழக முதலமைச்சருக்கு மட்டும் எப்படி அந்த அதிகாரம் இல்லாமல் போகும்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் பேசுவது பொய். மாநில உரிமை என பேசும் முதலமைச்சர் மற்ற விஷயங்களுக்கு எல்லாம் மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர் இதற்கு மட்டும் தயங்குவது ஏன். இது வன்னியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. சமூக நீதி பிரச்சனை" என்றார்.












Click it and Unblock the Notifications