உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சூடான்.. இந்தியர்களை மீட்க அன்புமணி கோரிக்கை
சென்னை: சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டின் இராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டுப் போரில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது!

சூடானில் தங்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுடன் தங்கியுள்ள அவர்கள், குழந்தைகளுக்கான உணவு கூட கிடைக்காததால் ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!
சூடானின் 24 மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட தமிழர்கள் அதிகம் வாழும் உம்துர்மன் நகரம் மீது இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. அதனால் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்!

சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கும், இந்திய வெளியுறவுத் துறைக்கும் உண்டு. இனியும் தாமதிக்காமல், அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, சூடானில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி, 2019 ஆம் ஆண்டு மக்கள் புரட்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் ராணுவமும் ஜனநாயகத் தலைவர்களும் கூட்டாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு ஆட்சி நடத்தி வந்தனர். ஆனால், 2021 ல் ஏற்பட்ட ராணுவப் புரட்சி அந்த உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர், ராணுவ தளபதிகள் ஒருங்கிணைந்து இறையாண்மை கவுன்சில் என்ற பெயரில் குழு அமைத்து ஆட்சி நடத்தி வந்தனர்.

அதன் தலைவராக ராணுவ ஜெனரல் புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெடியும் செயலாற்றி வந்தனர். மக்களின் தொடர் போராட்டத்தால், ஜனநாயக ரீதியான புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் அந்த குழு மேற்கொண்டு வந்தது. இதுவரை சுமூகமான உறவே நீடித்து வந்த நிலையில், ராணுவத்துடன் துணை ராணுவப் படைகளை இணைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்த போது இருபிரிவினர் இடையே மோதல் வெடித்தது. கார்டோம் மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் 4வது நாளாக மோதல் தொடரும் நிலையில், இந்தியர் உள்பட 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,000 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு மருத்துவமனைகள் சூறையாடப்பட்டன. உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications