தந்தையை மிஞ்சும் தனயன்.. பாமகவை சூழ்ந்த பரபரப்பு புயல்! 100 நாளில் அன்புமணிக்கு ’மெகா’ டாஸ்க்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 100 நாள் நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ். ஜூலை 25ஆம் தேதி முதல் இந்த பயணம் தொடங்கும் நிலையில் திமுக அரசை எதிர்த்து இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் கட்சியில் அன்புமணி ராமதாஸ் செல்வாக்கை காட்டவும், 2026 தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்துவதற்காகத் தான் இந்த பயணம் என்கின்றனர் பாமகவினர்.
பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது பாமக உட்கட்சி விவகாரம். கட்சியின் தலைவர் நான் தான் என உறுதியாக கூறி இருக்கிறார் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். கடந்த சில தினங்களாகவே அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் மாநில பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த அன்புமணி ஆதரவாளர்களை நீக்கியதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் நீக்கியவர்களை மீண்டும் பதவியில் சேர்ப்பதாக அறிவித்ததோடு பொதுக்குழுவின் படி நான் தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார்.

அன்புமணி ராமதாஸ்
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுப்பது என தீர்மானமும் நிறைவேற்ற திட்டமிட்டு இருக்கிறது. விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி அன்புமணி ராமதாசை தலைவராக தேர்ந்தெடுப்பதோடு கட்சி விதிகளில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள் என்ன சொல்லப்படுகிறது. இதற்கு இடையே ராமதாஸ் அன்புமணியை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
பாமக மோதல்
கட்சியில் இருக்கும் சில தலைவர்களும், குருமூர்த்தி, சைதை துரைசாமி போன்ற கட்சி அல்லாத நபர்களும் இருவருக்கும் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், ராமதாஸ் சமாதானம் ஆவது போல தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் ஜூலை 25ஆம் தேதி முதல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி சுற்றுப் பயணம்
சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை உள்ளிட்ட பத்து அம்ச முழக்கத்தோடு இந்த பயணம் இருக்கும் என்கின்றனர். ஜூலை 25ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை 100 நாள் இந்த பயணம் நடைபெற இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இந்த பயணத்தை தொடங்குகிறார் அன்புமணி. அடுத்தடுத்து அவர் எங்கு செல்வார் என்பது குறித்து அறிவிக்கப்பட இருக்கிறது.
பாமகவில் செல்வாக்கு
இதற்கிடையே திமுக எதிர்ப்பு என்பதை விட பாமகவில் தனக்கு இருக்கும் செல்வாக்கை வெளி காட்டவே இந்த பயணம் என்கின்றனர் பாமகவினர். இதுவரை ராமதாஸ் முக்கிய நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் வயது காரணமாக கலந்து கொள்வதில்லை. அன்புமணி ராமதாஸ் தான், பாமக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், நிர்வாகிகள் தொண்டர்கள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என்பதை ராமதாஸுக்கு தெரியப்படுத்தவே இந்த பயணம் என்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல்
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தயார்படுத்தவும் தான் இந்த ஏற்பாடு என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே கட்சியில் உட்கட்சி விவகாரங்கள் இருக்கும் நிலையில் அதனை தீர்த்து விட்டு இந்த பயணத்தை அன்புமணி தொடங்குவார் என கூறப்படுகிறது. ஜூலை 25ஆம் தேதிக்கு முன்னதாக பல அதிரடி மாற்றங்கள் பாமகவில் நிகழலாம் எனவும் சொல்லப்படுகிறது. பொதுக்குழு தேதி அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்த பாமகவினர்.












Click it and Unblock the Notifications