முதல்வர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி திடீர் சந்திப்பு.. பரபரத்த தலைமை செயலகம்.. ஏன் என்னாச்சு?
முதல்வர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலகத்தில் பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போது அந்த இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்த கட்சி பாமக என்ற விமர்சனம் உள்ளது.
மத்தியிலும் மாநிலத்திலும் பதவிகளை பெற்றுக் கொண்டுவிட்டு பின்னர் கூட்டணி தலைமையை விமர்சித்து அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி அடுத்த கட்சிக்கு கூட்டணிக்கு செல்வர் என்ற பேச்சும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருந்து வந்தது.

உள்ளாட்சி தேர்தல்
அண்மையில் உள்ளாட்சித் தேர்தலின் போதுதான் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணி
பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருந்தார். ஆனால் பாமகவோ திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன் ஒரு முறை நம்மிடம் பேசினார்.

பாமக, திமுக
அவர் கூறுகையில் பாமக, திமுகவுக்கு செய்த துரோகமானது இன்னமும் ஆறாத வடுவாக இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது போல் திமுக கூட்டணியில் பாமக இருப்பதற்கு சாத்தியம் இல்லை. இவ்வாறு ஒவ்வொரு கூட்டணிக்கும் செல்லும் பாமக தங்களுக்கு வேண்டியதை பெற்றவுடன் என்ன செய்யும் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே அந்த கட்சி எந்த கூட்டணிக்கும் விசுவாசமாக இல்லாத துரோக கட்சி என விமர்சித்திருந்தார்.

பாமக பதில் என்ன
இதுகுறித்து பாமகவிடம் கேட்ட போது கூட, இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கின்றன. இப்போதே கூட்டணி வைத்து கொண்டு என்ன செய்ய போகிறோம் என கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை இன்றைய தினம் பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

கூட்டணி விவகாரம்
ஒரு வேளை கூட்டணி விவகாரம் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்புக்கு பிறகு அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினேன். நிச்சயமாக நாங்கள் இருவரும் அரசியல் குறித்து எதையும் பேசவில்லை.

10.5 சதவீத இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பேசினேன். நீர் மேலாண்மை, அரியலூர் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பேசினேன். தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என கூறி சில காரணங்களை நீதிபதிகள் பட்டியலிட்டனர். இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.












Click it and Unblock the Notifications