அன்புமணி ராமதாஸின் 2ம் கட்ட நடைப்பயணம்.. ஆகஸ்ட் 7 இல் வந்தவாசியில் தொடக்கம் - பாமக அறிவிப்பு
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வந்தவாசியில் தொடங்கவுள்ளதாக பா.ம.க. தலைமை நிலையம் அறிவித்துள்ளது. இந்த பயணத்தின் முதற்கட்டம் வரும் 4 ஆம் தேதி மாலை திருப்பத்தூர் நகரில் நிறைவடைய உள்ள நிலையில், இரண்டாம் கட்ட பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அன்புமணி நடைப்பயணம்
இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்கள் விரோத, சமூக நீதிக்கு எதிரான, கொடுங்கோல் திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25 ஆம் நாள் திருப்போரூர் நகரில் தொடங்கி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

உரிமை மீட்பு பயணம்
தமிழ்நாட்டு மக்களுக்கு 1. சமூக நீதிக்கான உரிமை 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை 3. வேலைக்கான உரிமை 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை 5. வளர்ச்சிக்கான உரிமை 6. நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை , 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை 8. மது&போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை. 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த பயணத்தின் முதற்கட்டம் வரும் 4 ஆம் தேதி மாலை திருப்பத்தூர் நகரில் நிறைவடைய உள்ளது.
இரண்டாம் கட்ட பயணம்
அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18 ஆம் நாள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடையவுள்ளது.
இரண்டாம் கட்ட பயணத்தின் விவரங்கள் வருமாறு:
ஆகஸ்ட் 7 - வந்தவாசி, செய்யாறு
ஆகஸ்ட் 8 - பென்னாத்தூர், போளூர்
ஆகஸ்ட் 11 - திண்டிவனம், செஞ்சி
ஆகஸ்ட் 12 - மைலம், விழுப்புரம், விக்கிரவாண்டி
ஆகஸ்ட் 13 - இரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை
ஆகஸ்ட் 17 - பர்கூர், ஊத்தங்கரை
ஆகஸ்ட் 18 - கிருஷ்ணகிரி, ஓசூர்
3 ஆம் கட்ட பயணம்
மூன்றாம் கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications