எனக்கு டாக்டர் இளையராஜா! உலகின் தலைசிறந்த மருந்து இசைஞானியின் இசை! அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
சென்னை: தனக்கு டாக்டர் இளையராஜா என்றும் அவரது இசை தான் தனக்கு உலகின் தலைசிறந்த மருந்து எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூடியுள்ளார்.
இளையராஜாவின் 80வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்ற வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், இளையராஜாவின் இசை குறித்து சிலாகித்தார்.
தாம் பொது வாழ்க்கையில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் பிரச்னைகளுடன் எழுந்து, பிரச்னைகளுடன் தான் துாங்கச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு இளையராஜாவின் இசை அரு மருந்தாக இருப்பதாகவும் கூறினார்.

தன்னை பொறுத்தவரை இளையராஜாவின் தீவிர ரசிகன் என்றும், அவ்வப்போது அவரை நேரிலும் சந்தித்து பேசுவேன் எனவும் தெரிவித்தார். இளையராஜாவின் பாடல்களை கேட்கும்போது தனது மனதில் பசுமையாக பதிந்துள்ள பள்ளி, கல்லுாரி காலங்கள், முக்கிய நினைவுகள் நிழலாடும் என ''அது ஒரு கணா காலம்'' என்ற பாடலுக்கேற்ப தனது இளமைக்காலத்தை ரீவைண்ட் செய்தார்.
தன்னை பொறுத்தவரை இளையராஜா தான் தனக்கு டாக்டர் என்றும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில், மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்து அவர் இசை எனவும் கூறினார். மேலும், இளையராஜா தமிழராக பிறந்தது நமக்கு பெருமை என்றும் இப்போது தானும் அவரும் தோழர்கள் எனவும் அன்புமணி தெரிவித்தார்.
மேலும், தானும் ராஜ்யசபா உறுப்பினர், அவரும் ராஜ்யசபா உறுப்பினர்' என்ற அன்புமணி பல்லாண்டு காலம் இளையராஜா வாழ வேண்டும் என வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications