திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
சென்னை: அதிமுக கூட்டணியில் சேரும்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், நாதக சீமான் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அழைத்து வந்தார். அவர்கள் வரவில்லை என்றதும் எங்களிடம் வந்தார் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த பாமக, இந்த முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்று 10 சீட்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக, தங்கள் கூட்டணியில் இணையாததை விமர்சித்துப் பேசி இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அன்புமணி ராமதாஸ் ஒரு வேடந்தாங்கல் பறவை. அதனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்" என்று விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு இன்று பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். எங்களின் உயிரை, உழைப்பை கொடுப்போம். அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்போம்." என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த மரியாதை உண்டு. பாமகவுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தோம், அவர்கள் கூட்டணிக்கு வரவில்லை என அவர் சொல்லியிருக்கிறார். 2019-ல் அதிமுகவுக்கு நாங்கள் ஆட்சியை கொடுத்தோம். நாங்கள் இல்லையென்றால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தது. எங்களால் தான் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சியும் இருந்தது. எடப்பாடி பழனிசாமியும் முதல்வராக இருந்தார்.
அந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை 10.5 இடஒதுக்கீடு குறித்தும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் வலியுறுத்தினோம். நேரடியாக சென்று கூறினோம், போராட்டம் நடத்தினோம். ஆனால் தேர்தலுக்கு முன்புவரை இழுத்து, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கடைசி நிமிடத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கிறது என்றால் 1 மணிக்கு தான் இடஒதுக்கீடு உத்தரவு வெளிவருகிறது. அதற்கு இடையே நடந்ததை எல்லாம் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை.
உண்மையாகவே அவர்கள் மனதில் பின்தங்கிய சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், கொஞ்சம் முன்னதாகவே இடஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி வந்தால் தான் இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்கள். அதுவும் அவசர அவசரமாக இடஒதுக்கீடு கொடுத்தது அதிமுக. அதில் அவ்வளவு பிழைகள். நாங்கள் கேட்டது 16 சதவிகித இடஒதுக்கீடு. ஆனால் அவர்கள் கொடுத்தது 10.5 சதவிகித இடஒதுக்கீடுதான்.
நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது. நீதிமன்றம் ரத்து செய்த பிறகு மீண்டும் அந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எங்காவது ஒரு இடத்தில் பேசியிருப்பாரா? இல்லை. இன்று வரை அவர் அதை பேசவில்லை. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பேச அவருக்கு தைரியம் இருக்கிறதா? 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக தான் தோற்றதாக அதிமுக தலைவர்கள் பலமுறை சொல்கிறார்கள்.
2021 சட்டசபை தேர்தலில் 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றிபெற்று இருக்காது. அதிமுக ஆதரவாலும் நாங்கள் 4 தொகுதிகளை வென்றோம். ஆனால் 15 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அதிமுகவினர் எங்களுக்கு ஓட்டு போடாததால் பாமக பல இடங்களில் தோற்றது.
கடந்த ஆறு மாதங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், சீமானையும் கூட்டணிக்கு அழைத்து கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் யாரும் வரவில்லை. அதன்பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார். இப்படி பேச்சுவார்த்தை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், அதற்குள் போக விரும்பவில்லை.
எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் பாமக தனது கொள்கைகளை, சித்தாந்தத்தை விட்டுக்கொடுக்கப் போவது கிடையாது. ஒரு துளி கூட விட்டுக்கொடுக்காது. திமுக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் கொள்கைகளையும் மறந்துவிட்டது. திமுகவை வைத்து அவர்கள் ஆட்சி நடத்தவில்லை. வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நிர்வாகம் நடக்கவில்லை. வியாபாரம் நடக்கிறது. மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். சமூக நீதிக்கும் திமுகவுக்கு சம்பந்தம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications