ஆட்சிக்கு வர முடியலையேனு வலி இருக்கு.. வேதனையில் பொங்கிய அன்புமணி
சென்னை: 2019ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை என்றால், அப்போதே அவர்கள் ஆட்சியை விட்டு சென்றிருப்பார்கள் எனவும், இளைஞர்களுக்கு பாமகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் வழிவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி! உற்சாக டானிக் கொடுத்த அன்புமணி! பொதுக்குழு சுவாரஸ்யம்!
பொதுக் குழு கூட்டத்தில் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், இளைஞர்களுக்கு மூத்த பொறுப்பாளர்கள் வழி விட வேண்டும் எனவும், பாமகவிடம் உள்ள அளவு பிற கட்சிகளிடம் இளைஞர் சக்தி கிடையாது என கூறினார். மேலும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ராமதாஸ் அவர்களின் முதல் விருப்பமாக இருந்தது, அது தற்போது தடை பட்டுள்ளது, ஆனால் அது விரைவில் தீர்க்கப்படும் எனவும், தமிழகத்தை பாமக ஆள வேண்டும் அதுவே ராமதாஸ் அவர்களின் அடுத்த விருப்பம் என கூறினார்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு
10.5 சதவீத இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் கிடைக்கவில்லை என்றாலும், அதை பெற்றே தீருவோம், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்த அன்புமணி, அநியாயமாக 10.5சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால், அதை கண்டித்து ஆளும் கட்சியோ, ஆண்ட கட்சியோ பேசினார்களா என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். வன்னியர்கள் வாக்கு மட்டும் அவர்களுக்கு வேண்டும் ஆனால் அவர்கள் படித்து முன்னேறி விடக்கூடாது என சிலர் நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டினர்.
ஆட்சிக்கு வராதது வலி
சமூக நீதி பற்றி பேச பெரியாரின் வாரிசுகள் என சொல்லி கொள்பவர்களுக்கு தகுதி இல்லை, அந்த ஒரே தகுதி ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளது எனவும், இந்தியாவிலேயே சமூக நீதிக்காக பாடுபட கூடிய கட்சி பாமக தான் என கூறிய அன்புமணி, பாமகவை தொடங்கி 32 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வராதது தமக்கு வலியை ஏற்படுத்துவதாகவும், ராமதாஸ் அவர்கள் சொல்லியதை தான் ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் செய்து வருவதாகவும், எனவே, அந்த கையெழுத்தை நாமே போட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சி போயிருக்கும்
2019ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணிக்கு தாங்கள் செல்லவில்லை என்றால், அப்போதே அவர்கள் ஆட்சியை விட்டு சென்றிருப்பார்கள் எனவும், 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதி என சமரசம் செய்து கொண்டதாகவும் கூறிய அன்புமணி, அதிமுக கட்சியில் எதிர்ப்பு இருந்தும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார், அதற்காக அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாக கூறினார்.
திமுகவுக்கு வாய்ப்பில்லை
அடுத்த முறை மக்கள் நிச்சயம் திமுகவுக்கு வாய்ப்பு தர போவதில்லை தங்களுக்கு தான் வாய்ப்பு தர போகிறார்கள், அரசியல் களம் தற்போது காலியாக உள்ளது, அதற்கு பாமகவினர் தயாராக இருக்க வேண்டும் என அன்பு மணி தெரிவித்தார். மேலும், 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.