மோடி சொல்வதை கேட்க முடியாது.. ஜோஹோவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்' கிடையாது.. ஸ்ரீதர் வேம்பு தடாலடி
சென்னை: பொதுமக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி சொல்வதை கேட்க முடியாது என்று முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பிரதமர் மோடியின் செயல்பாட்டை பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீதர் வேம்பு பாராட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது திடீரென்று பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளார். அதாவது ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனையால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். கொரோனா பரவல் காலத்தில் பின்பற்றப்பட்ட ஆன்லைன் மீட்டிங், தங்கம் வாங்குவதையும், வெளிநாடு பயணத்தையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இதனை ஓராண்டு காலம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதுபற்றி ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில், '' பலரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன்பிறகு வீட்டில் இருந்து பணிபுரியும் முறையை விரிவுப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஏனென்றால் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளில் (R&D) நேரடி சந்திப்புகள் மூலம் விரைவாக ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்க்கலாம். உற்பத்தி திறனையும் அதிகப்படுத்தலாம்.
ரிமோட் (வீட்டில் இருந்து பணி)முறையில் பணியாற்றும்போதும் பிரச்சனைகளை தீர்க்க அதிக நேரம் எடுக்கும் என்பதை எனது சொந்த டீம் அனுபவத்தில் இருந்து புரிந்து கொண்டுள்ளேன். குறிப்பிட்ட ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்காதபோது அதற்கான தீர்வுக்கு அதிக நேரம் எடுக்கும். அதேவேளையில் போக்குவரத்துக்கு மின்சார பஸ், கேன்டீன்களில் மின்சார அடுப்பு பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம். ஏற்கனவே சோலார் பயன்பாட்டில் நாங்கள் அதிக முதலீடுகளை செய்துள்ளோம்'' என்றார்.
இதன்மூலம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு நிராகரித்துள்ளார்.
ஊழியர்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை ஜோஹோ நிறுவனம் கொடுக்க மறுத்தாலும் கூட எரிபொருள் நுகர்வை குறைக்க தேவையான நடவடிக்கையை எடுப்பதாக ஜோஹோ நிறுவனர் கூறியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடியின் அறிவுரையை தொடர்ந்துஇன்னும் சில நிறுவனங்கள் ஹைபிரிட் முறை பணியை ஊழியர்களுக்கு வழங்கி உள்ளன. அதன்மூலம் வாரம் 2 நாள் வரை வீட்டிலும், மற்ற நாட்கள் அலுவலம் வந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கி உள்ளது. டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் தங்களின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications