தைலாபுரத்தில் வெடித்த வெடி.. உடைகிறதா பாமக? ராமதாஸ்-க்கு போட்டியாக நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்-க்கு தலைமை பண்பே இல்லை என்றும், அவரை 35 வயதில் மத்திய கேபினட் அமைச்சராக ஆக்கியதே தவறு என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் நாளை சென்னையில் பாமக மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்த போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் வெட்ட வெளிச்சமாகியது.

புலம்பிய அன்புமணி
சில வாரங்களுக்கு முன்பாக பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதுகுறித்து தர்மபுரி கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், நான் என்ன தவறு செய்தேன்.. எதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டேன்? இரவில் படுத்தால் தூக்கமே இல்லை என்று புலம்பி இருந்தார். இதனால் அன்புமணி - ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது.
ராமதாஸ் பேட்டி
ஆனால் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, நான் செய்த சத்தியத்தையும் மீறி 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு. அன்புமணியிடம் தலைமைப் பண்பே இல்லை. வளர்த்த கடா வீறுகொண்டு இடித்ததில் நிலைகுந்து போய்விட்டேன். முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்த போது, அவரின் அம்மா உன் மகளை நியமித்திருந்தால் என்ன சொல்லி இருப்பாய் என்றார்.
அம்மாவை அடிக்க போன அன்புமணி
உடனடியாக அன்புமணி ஒரு பாட்டிலை எடுத்து அம்மாவை நோக்கியே வீசினார். அது நல்வாய்ப்பாக அவர் மீது படவில்லை. அதிமுக கூட்டணிக்கு செல்லலாம் என்று கூறிய போதும், அன்புமணியும் செளமியாவும் காலினை பிடித்து பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கதறினார்கள். வேறு வழியின்றி பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டேன் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
உடைகிறதா பாமக?
அதுமட்டுமல்லாமல் தேவையென்றால் பொதுக்குழுவை கூட்டி பாமகவில் இருந்து அன்புமணியை நீக்குவேன் என்றும் கூறினார். அன்புமணி - ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கும் சூழலில், பாமக உடைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் ராமதாஸ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நாளை நிர்வாகிகள் கூட்டம்
இந்த நிலையில் சென்னையில் நாளை பாமக மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அன்புமணி ராமதாஸின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications