வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது.. அன்புமணி அறிக்கை
சென்னை: தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில் அதை காரணம் காட்டி மின்சாரம், பஸ் போன்றவற்றின் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என மாநிலங்களவை எம்பியும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்தார். அதில் தமிழக மின்சார வாரியம், போக்குவரத்து கழகங்களின் கடன் மட்டும் ரூ 2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்து கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து விட்டதாக அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிப்பு
தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர், கடன் சுமையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பார் என்று நம்புவோம்.

மானியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
பயனற்ற இலவசங்கள், மானியங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அரசின் உதவிகள் தேவையானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் நிலை. அமைச்சரின் பேச்சை பார்க்கும்போது மின்கட்டணம், பஸ் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கட்டணங்கள் உயர்த்த கூடாது
இந்த கட்டணங்கள் உயர்த்தப்படக் கூடாது. தமிழ்நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அது நிர்வாக சீர்திருத்தங்களின் மூலமாக செய்யப்பட வேண்டுமே தவிர, மக்கள் மீது சுமையை சுமத்துவதன் மூலமாக இருக்கக் கூடாது என்பதை தமிழக அரசுக்கான பா.ம.க.வின் ஆலோசனையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அன்புமணி ராமதாஸ்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் அரசியல் துணிச்சலும் நிர்வாக திறமையும் இருந்தால் நிச்சயம் இந்த கடன் சுமையை சரி செய்யலாம். மேலும் வரி வசூலில் உள்ள சிஸ்டங்களை மாற்ற வேண்டும். கிளப் ஹவுஸில் வீடு வைத்திருக்கும் பணக்காரருக்கும் ஒரே சொத்து வரி, எங்கோ ஒரு மூலையில் வீடு வைத்திருக்கும் ஏழைக்கும் ஒரே வரி வசூலிக்கப்படுகிறது.

தனி பட்ஜெட் தாக்கல்
அது போல் குழாய் இணைப்பும் அதே போல்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே வரியாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். யாரெல்லாம் வரி உயர்வை கட்ட இயலுமோ அவர்கள் மீது வரியை உயர்த்த திட்டங்களை வகுப்போம் என்று தெரிவித்திருந்தார். தமிழக பட்ஜெட் வரும் வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண்மை துறைக்கென தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடன் வாங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த கடன் வாங்குவது, பின்னர் திட்டங்களுக்கு கடன் வாங்குவது என கடன் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது. ஆனால் வாங்கிய கடனை திருப்பி எடுக்கும் திட்டங்களில் பயன்படுத்த வேண்டும். தொழில் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசால் வட்டி செலுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications