"எய்ட்ஸ்".. நாட்டிலேயே அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ளது இங்கேதான்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆந்திராவில் தான், அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
சென்னை: நாட்டிலேயே ஆந்திர மாநிலத்தில்தான், அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது...
இந்தியாவில் எச்ஐவியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.. இதற்காக நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்களும் கணக்கில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் சில ஆய்வுகள் மேற்கொண்டது. அதன்படி புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள், பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு கவுன்சில், பூர்விக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில்: "கடந்த 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்தியாவில் மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 55 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 447 பாலியல் தொழிலாளர்கள் ஆந்திரப்பிரதேசத்திலும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 288 பாலியல் தொழிலாளர்கள் கர்நாடகாவிலும், 1 லட்சத்து 818 பேர் தெலுங்கானாவிலும் உள்ளனர்.. தமிழ்நாட்டில் 65 ஆயிரத்து 818 பேரும் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பாலியல் தொழிலாளர்களில் 1,450 பேர் HIV (எச்ஐவி) நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மருந்துகளை உட்கொண்டு பாலியல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்...
பூர்வீக பாலியல் தொழிலாளர்களை பொறுத்தவரை, ஆந்திராவிற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் உள்ளனர்.. அதாவது, 59 ஆயிரத்து 785 பேரும், டெல்லியில் 46 ஆயிரத்து 786 பேரும், மிசோரமில் 833 பேரும் இருக்கிறார்கள். ஆந்திராவில் 11 ஆயிரத்து 639 பேர் அண்டை மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர்... இதில், குண்டூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 781, கர்னூலில் 12 ஆயிரத்து 709, சித்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 296 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தன்னுடைய ஆய்வில் தற்போது தெரிவித்துள்ளது...
சில நாட்களுக்கு முன்பு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் இதே தகவல் வெளியாகி இருந்தது.. அதில், "ஆந்திராவில் 1.33 லட்சம் பூர்விக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கர்னூல், சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கடப்பா மாவட்டத்தில் எண்ணிக்கை குறைவாக உள்ளது. புலம் பெயர்ந்த மற்றும் பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இங்கு மொத்தம் 6.6 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர். இதன்மூலம் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்திலும், 2.3 லட்சம் பாலியல் தொழிலாளர்களுடன் குஜராத் 2வது இடத்திலும், குஜராத்தை விட சற்று குறைந்து டெல்லி 3வது இடத்தையும் வகித்துள்ளது.. வடமாநிலங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். தென்மாநிலங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் குறைவாக உள்ளதோடு, பூர்வீகமாக வசிப்பவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்" என்று மத்திய அரசின் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.