ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஞ்சலை.. கந்துவட்டி ராணியை இன்னொரு வழக்கிலும் கம்பி எண்ண வைத்தது யார்?
சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய வழக்கில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டார். கந்துவட்டி ராணியான அஞ்சலை மீது ஏராளமான வழக்குகள் இருக்கும் நிலையில், புதிதாக எந்த வழக்கில் கைதானார் என்பதை பார்ப்போம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக வீடு கட்டி வந்தார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் புது வீடு கட்டும் இடத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு, தப்பி ஓட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதேநேரம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிகரன், சதீஷ் மற்றும் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை (48) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொலை திட்டமிட்டு நிகழ்த்தியது யார் என்பது குறித்து போலீசார் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்தும் வெளிப்படையாக போலீசார் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டையே உலுக்கிய பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள புளியந்தோப்பை சேர்ந்த பா ஜனதா முன்னாள் நிர்வாகி அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைதாகி உள்ளார். பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்த முகமது அசாருதீன் (37) புகார் கொடுத்தார். இது தொடர்பாக கடந்த மே மாதம் 9-ம் தேதி பேசின் பிரிட்ஜ் போலீசில் அசாருதீன் புகார் அளித்தார்.
அந்த புகாரில் " என் பெயர் அசாருதீன், நான் கேட்டரிங் வேலை செய்து வருகிறேன். தொழில் விருத்திக்காக எனக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் இம்ரான் என்பவர் புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை, சங்கீதா, சந்திரன், திருநங்கை ஆலிநா ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் இருந்து ரூ,30 லட்சத்தை வாங்கி அதை பல கட்டங்களாக ரூ,66 லட்சம் வரை நான் திருப்பிக் கொடுத்தேன். மேலும் பணம் வேண்டும் என அஞ்சலை உள்பட மேற்கண்ட 5 பேரும் என்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க முடிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார், வழக்குப்பதிவு செய்து அஞ்சலையை தேடி வந்தனர். இதனிடையே தலைமறைவாக இருந்த அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தற்போது முகமது அசாருதீன் கொடுத்த புகாரின் பேரில் நேற்று கந்துவட்டி வழக்கில் எழும்பூர் குற்றவியல் கோர்ட்டில் அஞ்சலை ஆஜர்படுத்தப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications