பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வினை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி
சென்னை: பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வின்போது பொறியியல் கல்லூரி மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுகளாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள், பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. கொரொனோ பாதிப்பு காரணமாக கடந்த முறை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன் லைன் வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்நிலையில், தற்போது அந்த முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது.
தேர்வின் போது விடை எழுதும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம். அதேபோன்று தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications




























