செல்வாக்கான ஞானசேகரனை ரிலீஸ் செய்துவிட்டு மீண்டும் கைது செய்த போலீஸ்! ஹைகோர்ட்டில் பாஜக வாதம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் விடுவிக்கப்பட்டு பின்னர் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த அளவுக்கு அவர் செல்வாக்கான நபர் என்றும் மனுதாரர் தரப்பு வாதம் வைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர். இந்த நபர் பிரியாணி கடை நடத்தி வருகிறாராம்.
இவர் பிரியாணி கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சுவர் ஏறி குதித்து சென்ற போது அங்கு பாதிக்கப்பட்ட மாணவி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஞான சேகரன் அதை வீடியோவாக எடுத்து பிறகு அவரிடம் சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினாராம்.

மறுத்த அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கூறி வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு முன்பு 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதி தேவை. அவர் தற்போது வெளியூரில் இருப்பதால் இந்த வழக்கை இப்போது சுயோமோட்டாவாக நடத்த முடியாது.
மனுதாரர் ரிட் வழக்காக தாக்கல் செய்தால் மாலை விசாரிப்போம் என உயர்நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கை ரிட் மனுவாக பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் தாக்கல் செய்தார்.இது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, தனது வாதங்களை முன் வைத்து வருகிறார். அதில் "முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர், இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
காவல் துறை இணையதளத்தில் வெளியிட்டது சட்ட விரோதமானது.
பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது.
இப்போது பாதிக்கப்பட்ட மாணவி யார், அவரது பெற்றோர் யார்? மொபைல் எண் என அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.
ஓய்வு பெற்ற பெண் நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். ஞானசேகரை முதலில் கைது செய்த போலீஸார் விடுவித்து பின் அழுத்தம் அதிகமானதால் மீண்டும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் செல்வாக்கான நபர்" என மனுதாரர் வாதத்தில் முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications