அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு.. மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் தேர்வு.. அமைச்சர் பொன்முடி
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வுக்கு மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆண்லைன் முறையிலேயே பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல தேர்வுகளும் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
ஆலோசைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் 4.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள், அதில் வெறும் 25%, அதாவது 1.10 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்தனர்.
இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் முறையில் 3 மணி நேரம் தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாணவர்கள் தேர்வு கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
ஏற்கனவே, பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களும் மதிப்பெண்களை அதிகப்படுத்த விரும்பினால் இந்தத் தேர்வை எழுதலாம். எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளனரோ, அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்றார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியது என்றும் மாநில உரிமைகள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications