அண்ணா பல்கலைக்கழக சுவர் ஏறி குதித்து.. காதலர்களை வீடியோ எடுத்த பிரியாணி கடை ஞானசேகர்! திடுக் தகவல்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகர் பிரியாணி கடை முடிந்ததும், காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே சென்று அங்கு தனியாக இருக்கும் காதலர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான ஞானசேகர் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்றும், குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைதாகி இருக்கிறார். ஞானசேகர் குறித்த பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வரும் மாணவி சென்னை கோட்டூர்புரம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், பல்கலைக்கழக வளாகத்தில் தன் காதலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் எங்களை மிரட்டினார் என்றும், பின்னர் அடித்து தாக்கி என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
மாணவியின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
ஞானசேகர் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி இருக்கிறாராம்.
பிரியாணி கடையில் வியாபாரம் முடிந்ததும், ஞானசேகர் நேராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் காட்டுப்பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே செல்வாராம். பின்னர் அங்கு தனியாக இருக்கும் காதலர்களை அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுப்பாராம். பின்னர் அவர்களிடம் அந்த புகைப்படங்களை காண்பித்து, போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையே தினமும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவ்வாறாக பல மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும், அவர்களிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டதாகவும் போலீசார் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இதேபோல் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அவரது செல்போனில் இருந்துள்ளது.
இதையடுத்து போலீசார் ஞானசேகரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? எத்தனை பெண்களை இப்படி ஏமாற்றியுள்ளார்? எவ்வளவு பணம் பறித்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.
முன்னதாக போலீசார் வெளியிட்டிருந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:- கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், ( வயது 37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications