அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சீமான், கட்சியினர் கைது
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் போராட்ட இடத்திற்கு காரில் வந்து இறங்கிய சீமானையும் போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து இறங்கி போராட்ட இடத்திற்கு வந்த போது சீமானை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சீமான் கூறுகையில், ’பத்திரிகையாளர்களை கூட சந்திக்கவிடாமல் செய்தால் எப்படி?.. எதற்கு போராட்டம் என்று கூட சொல்லவிட மாட்டுக்கிறார்கள். அற வழியில் போராடுவதற்கு கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை’ என்றார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டன. நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து மனு அளித்து இருந்தார்.

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அனுமதியை பெற சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவானது முறையாக பரிசீலிக்கப்பட்டதாகவும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் புத்தாண்டு நாளை கொண்டாடப்படுவதால், போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்ப வேண்டியிருப்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாது.

தடையை மீறி போராட்டம் செய்யமுயற்சி
மேலும் ஆர்ப்பாட்டத்தில் இவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்று மனுவில் கூறப்பட்டதைவிட, தற்போது அதிக அளவிலான நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் வந்ததால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதி போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதாலும் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்தாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக சீமானின் நாம் தமிழர் கட்சி கூறினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை உடனே கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.
சீமான் கைது
போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் ஒருபுறம் கைது செய்துகொண்டிருக்கிற, போராட்ட இடத்திற்கு காரில் வந்து இறங்கிய சீமானையும் போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து இறங்கி போராட்ட இடத்திற்கு வந்த போது சீமானை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
காரில் வந்துகொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பத்திரிகையாளர்களை கூட சந்திக்கவிடாமல் செய்தால் எப்படி?.. எதற்கு போராட்டம் என்று கூட சொல்லவிட மாட்டுக்கிறார்கள். அற வழியில் போராடுவதற்கு கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications