சூரப்பா மீது விசாரணை.. ஆளுநர் அதிருப்தி.. முதல்வருக்கு அதிரடி கடிதம்.. விசாரணையை கைவிட வலியுறுத்தல்
சென்னை: அண்ணா பல்லகலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக மொட்டை இ-மெயில் மூலம் புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து சூரப்பா மீதான புகாா்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது.

மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்ட நிலையில், நீதிபதி கலையரசன் தொடா்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில் நீதிபதி கலையரசன் குழு, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. உரிய ஆவணங்களுடன் செவ்வாய்க்கிழமை யான இன்று, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் கருணாமூா்த்தி நேரில் ஆஜராக சம்மனில் கூறப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா விசாரணை தொடா்பான ஆவணங்களை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் கடந்த வாரமே, முதல்வருக்கு ஆளுநர் ஒரு கடிதம் எழுதியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், சூரப்பா குறித்து விசாரிக்க குழு அமைத்தது நியாயமற்றது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு தெரியாமல் அரசு குழு அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது எனவும் ஆளுநர் கூறியுள்ளார். இதுவரை அரசு தரப்பிலிருந்து இந்த கடிதத்திற்கு பதில் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டு, சூரப்பாவை அண்ணா பல்கலை. துணை வேந்தராக நியமித்தார் பன்வாரிலால் புரோகித். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பொறுப்பில் இருப்பது ஆளுநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications