டெல்லி வரை "சிரிக்கும்" பாஜக மோதல்.. அண்ணாமலைக்கு சிக்கல்.. அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி தலைமை திணறி வருகிறது. இதனால் தமிழ்நாடு பாஜக தலைமை மாற்றப்படும் வாய்ப்புகளும் கூட உள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு எதிராக கடுமையான சில பிரஷர் வைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும் கடுமையான பிரஷர் கொடுக்கப்படுகிறதாம்.

அதன்படி பஞ்சாப்பில் பாஜக ஜீரோ எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் ஜீரோ எடுத்துள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களில் பாஜக தோல்வி காரணமாக மாநில தலைவர்களை மாற்றும் எண்ணம் டெல்லி பாஜகவிற்கு உள்ளதாம்.
அண்ணாமலை உட்பட பலருக்கு ராஜினாமா நெருக்கடி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதை மடைமாற்றவே அண்ணாமலை 2026 முதல்வர் என்று பேச தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை உட்பட பலரின் பதவி காலி ஆகலாம் என்கிறார்கள்.
அதோடு இல்லாமல் ஜேபி நட்டாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மாநில தலைவர்கள், தேசிய தலைவர் ஜே பி நட்டா மாற்றப்படலாம். அமித் ஷாவிற்கும் பிரஷர் வரும். அமைச்சர் பொறுப்போடு நிறுத்த வேண்டும், தேர்தல் வியூகங்களை வகுக்க கூடாது என்று பிரஷர் வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சுமுகமான தீர்வு: இதை எல்லாம் சுமுகமாக தீர்க்க பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பதவி எதாவது கொடுத்து அங்கே கொண்டு வரும் திட்டம் தேசிய பாஜக தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் டெல்லி போனால் ஒருவருக்கு ஒரு பதவி முறையில் தலைவர் பதவி பறிக்கப்படும். அதன் மூலம் எல் முருகன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு கீழ் பாஜக 2-4 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இவர்களை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஆக்டிவ் அரசியலுக்கு கொண்டு வர டெல்லி பாஜக யோசிக்கிறதாம்.
அண்ணாமலைக்கு இன்று அமைச்சரவை பதவி வழங்கப்படாது ஆனால் விரைவில் மேலிட பாஜக வழியாக ஏதாவது பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
அமைச்சரவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதோடு இன்று முதல் கட்ட அமைச்சரவை பதவி ஏற்பும் இருக்கும். இன்று கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளன. இன்று முழு அமைச்சர்களும் பதவியேற்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இன்று பாஜக மற்றும் சில கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இன்று நாடு முழுக்க அனைவரின் பார்வையும் மோடியின் அமைச்சரவை பெர்த் ஒதுக்கீட்டில் உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருப்பவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களாக போகும் எம்பிக்கள் பதவி ஏற்பார்கள்.
இந்த முக்கிய துறைகள் அனைத்தும் பாஜக வசம் தொடர்ந்து இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான அமைச்சரவையை கைப்பற்ற போகும் அமைச்சர்களும் இன்று பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications