அண்ணாமலையை "அண்ணாந்து" பார்க்கும் தலைவர்.. திருமா வீசிய சரவெடி.. எடப்பாடி பழனிசாமியின் திடீர் முடிவு?
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 விதமான வியூகங்களை வகுத்து வருகிறாராம். இதுவரை யாருடனுடமே கூட்டணி முடிவாகாத நிலையில், அதிமுகவின் ஒவ்வொரு நகர்வும் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "பாஜக கூட்டணியில் இருந்து நாம் பிரிந்தது, பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுகவில் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கள். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்புமில்லை.. சிறுபான்மையினர் வாக்குகளை திமுக வாங்கி வந்தது.. இப்போது அந்த வாக்குகளை நாம் வாங்கிவிடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது" என்று பேசியிருந்தார்.

இஸ்லாமிய அமைப்புகள்: எடப்பாடி பழனிசாமி இப்படி பேசினாலும், எதிர்பார்த்தபடி இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவுகள் பெருவாரியாக கிடைக்கவில்லை.. அதேபோல, திமுக கூட்டணியிலிருந்தும், இதுவரை எந்த கட்சியையுமே அதிமுக பக்கம் கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால், அதிமுகவின் பாஜக ஆதரவு தலைவர்களே, நொந்து போய்விட்டார்களாம்.
மற்றொருபக்கம், எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில், "தாமரை" கட்சியில் சிலர் முயன்று வருகிறார்களாம்.. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியிருந்தாலும், பாஜக மேலிடத்தை பற்றியோ, பாஜக தலைவர்களை பற்றியோ, பாஜக திட்டங்களை பற்றியோ, பாஜகவின் கொள்கைகளை பற்றியோ, இதுவரை விமர்சிக்கவுமில்லை, கருத்தும் சொல்லவில்லை.
அதிமுக கூட்டணி: அவ்வளவு ஏன்? சித்தாந்த ரீதியான மோதலில், ஆளுநருக்கு எதிரான கருத்தையும் இதுவரை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை என்பதையும் திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. எனவே, பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியை வைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமி, ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு, அப்செட்டில் உள்ளதாக சொல்கிறார்கள். அதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரை, வெற்றிகரமாக அமைந்து வருகிறது. ஆரம்பத்தில், இந்த நடைபயணத்துக்கு பெரிதாக யாரும் ஆதரவு காட்டவில்லை என்றார்கள்.. ஆனால், அவரது யாத்திரைக்கு பெருமளவில் கூட்டம் திரண்டுகொண்டிருப்பதை, அதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே கவனித்து வருகின்றன.
திருமாவளவன்: போதாக்குறைக்கு திருமாவளவன் பேசும்போது, அண்ணாமலை யாத்திரையில் அதிமுக, பாமகவை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று சரவெடியை வீசி எறியவும், அது அதிமுகவில் இன்னும் கொழுந்துவிட்டு எரிய துவங்கிவிட்டது. இதை எடப்பாடியே எதிர்பார்க்கவில்லையாம்.
ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்குமானால், அதிமுகவிலிருந்து பாஜக பக்கம், இளைஞர்களை வெளியேறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற கறார் முடிவை எடுத்துள்ளாராம். வரும் 21-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்த ஆலோசனையையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
என்னாகும்: என்டிஏ-வில் இருந்து விலகும் முடிவை, அதிமுக மறுபரிசீலனை செய்யுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வரும்நிலையில், பாஜகவுக்கு எதிரான "மூவ்"களை எடப்பாடி பழனிசாமி இனி எடுப்பாரா? அல்லது அதிமுக ஆலோசனை கூட்டத்தில், இளைஞர்களை தக்க வைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுமா? அல்லது கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்வாரா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications