மோடி கட்டளை.. உடனே களத்தில் அண்ணாமலை.. கோவில் மட்டுமல்ல.. மசூதி, தேவாலயத்திலும் இறங்கும் தமிழக பாஜக!
சென்னை: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில், குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, கோவிலை கழுவினார் அண்ணாமலை.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ஆம் தேதி தொடங்கினார். 11 நாள் கடும் விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி சடங்குகளை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறார். தரையில் தூங்கி, அதிகாலையில் எழுந்து மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது என விரதம் இருந்து வருகிறார்.
மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்தவகையில், கடந்த வாரம், மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தார். மேலும், அவர் செல்லும் ராமர் கோவில்களில் சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில், குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, கோவிலை கழுவினார் அண்ணாமலை. மேலும், பாஜகவினரை கோவில்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தியுள்ளார் அண்ணாமலை.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அண்ணாமலை, "அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இன்றைய தினம் காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், தமிழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டோம்.

மேலும், இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். தமிழக பாஜக சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications