ஒரத்தநாடு பாலியல் வன்கொடுமை வழக்கு! மெயின் அக்யூஸ்ட் உதயநிதி மன்ற நிர்வாகியாம்..அண்ணாமலை பரபர புகார்
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான கவிதாசன் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் பாஜக தலைவரான அண்ணாமலை.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அந்த பெண் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அதாவது திங்கட்கிழமை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அங்கு மறைந்திருந்த கவிதாசனின் நண்பர்களான திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இதனை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதை எடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கவிதாசனும் அந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தபோது தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று கவிதாசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் கத்தி முனையிலும் பீர் பாட்டிலை உடைத்தும் மிரட்டி அந்த இளம் பெண்ணை நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் திமுகவைச் சேர்ந்த உதயாநிதி ரசிகர் மன்ற நிர்வாகி என பரபரப்பு புகாரை முன் வைத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவைச் சேர்ந்த, உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் பெருகியிருக்கும் போதைக் கலாச்சாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டுப் பாலியல் பலாத்காரம் போன்ற மிக மோசமான குற்றம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழகக் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காகக் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது என்பதை முதலமைச்சர் எப்போது உணர்வார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications