அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு “இப்போ என்ன நாடகம்?” அண்ணாமலை ஆவேசம்
சென்னை: அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூடத்தில் திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? " என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதிகை தொலைக்காட்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பங்கேற்ற நிலையில், அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள "தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து பொதிகை தொலைக்காட்சி சார்பில் வருத்தம் கேட்கப்பட்டது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications