போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி.. விஷயம் கேட்டு அண்ணாமலை கொந்தளிப்பு!
சென்னை: காவல் நிலையம் முன்பு பாஜக நிர்வாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தை சேர்ந்த பாஜக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் நேற்று பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், காவல்துறையினரின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் காரணமாகவே தமிழ்ச்செல்வன் தீக்குளித்ததாக குற்றம்சாட்டி பாஜகவினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்,

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் அவர்கள் மற்றும் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா, காவல் நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications