விவசாயிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? வேளாண் பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி!
வேளாண் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
சென்னை : தமிழ்நாடு அரசு தனது வேளாண் பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நேற்று முன்தினம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விமர்சனம்
குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக தேர்தல் அறிவிப்பின் போது அறிவித்த நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 கரும்பு டன்னுக்கு ரூ.4,000 தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. திமுக அரசின் வேளாண் பட்ஜெட்டை திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ள அதேசமயத்தில் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேளாண் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார்.

போலி வாக்குறுதி
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 4000 ஆகவும் 'உயர்த்துவோம்' என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக.

இன்னும் எத்தனை ஆண்டுகள்?
ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3-வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயிகள் நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்குமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications