“அரசு வேலையா.. அது உதயநிதிக்கு மட்டும்தான் கிடைச்சிருக்கு!” தமிழக அரசு மீது அண்ணாமலை அட்டாக்
சென்னை: தமிழக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்று பேசியிருந்த அண்ணாமலை, தமிழக அரசு குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது,

"தமிழகத்தில் ஒரு அரசு துறை சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. கல்வித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை என எந்தத் துறையை எடுத்தாலும், ஊழல், குடும்ப அரசியல் என்று அந்தத் துறையை சீரழித்து விட்டது. இந்த நிலை தமிழகத்தில் மாற வேண்டும். இத்தனை ஆண்டுகளாக ஊழலையும், குடும்ப அரசியலையும் செய்து வரும் பங்காளிக் கட்சிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது கோபாலபுரத்தின் வளர்ச்சி அல்ல. ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் வளர்ச்சியே நமது வளர்ச்சி. நம் நாட்டின் வளர்ச்சி. ஐந்தாண்டுகளில் 3.50 லட்சம் அரசு வேலை வழங்குவோம் என ஆட்சிக்கு வந்த திமுக, உதயநிதியை அமைச்சராக்குவதில் முழு கவனம் செலுத்தி, 33 மாதங்களில் 10,600 இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றி விட்டது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அறிவித்து நிறைவேற்றுவோம்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை, தங்கள் திட்டங்களாக தி.மு.க., அறிவித்துள்ளது. புதிய திட்டங்கள் இல்லை. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படவில்லை. பெயரளவில் பல திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்காமல் திமுக ஏமாற்றியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, நம் ஊரையும், நம் தொகுதியையும், நம் மக்களையும் முன்னேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் ஊழல் அரசியலையும் நடத்தும் பங்காளிக் கட்சிகள் வேண்டாம். ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி தொடர இம்முறை தமிழகமும் துணை நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications