“புது ஆள் வந்து வெற்றியை பறிச்சிட்டு போய்ருவாங்க”.. விஜய் கட்சி பற்றி மறைமுகமாக பேசிய அண்ணாமலை!
சென்னை: பாஜக செயற்குழு கூட்டத்தில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மறைமுகமாகப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
கடுமையாக வேலை செய்யவில்லை என்றால் வெற்றி வாய்ப்பை நம் கண் முன்னால் யாரோ பறித்துச் சென்றுவிடுவார்கள். புதிய ஆட்கள் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். பசியோடு இருக்கிறார்கள் என விஜய் அரசியல் கட்சி பற்றி மறைமுகமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.

பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 4000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "பாஜகவினரிடம் சிந்தாந்தம், நேர்மை உள்ளது. பாஜகவில் தனிமனித துதி பாடலுக்கு இடம் கிடையாது. பாஜகவிற்கு உத்வேகம் தான் தேவை. கடந்த ஒரு மாத காலம் பணியாற்றியது போல அடுத்த 2 வருடங்களுக்கு பாஜகவினர் பணியாற்ற வேண்டும். கீழே இறங்கி வேலையை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
புதிய ஆட்கள் ரெடியாக இருக்கிறார்கள்: அகலமாக உழுதுவிட்டோம். இனி ஆழமாக உழவேண்டும். ஆழமாக உழவில்லை என்றால் வெற்றி வாய்ப்பை நம் கண் முன்னால் யாரோ பறித்துச் சென்றுவிடுவார்கள். புதிய ஆட்கள் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். பசியோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணிகள் மாறுவதற்கு கட்சிகள் தயாராக இருக்கின்றன. இந்த வாய்ப்பை தமிழக பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கிராமத்தில் இருங்கள், கீழே இருங்கள், பூத்தில் இருங்கள். கிராமத்தில் புதிதாக கட்சியை பலப்படுத்தி அதில் தலைவராக வாருங்கள். இளைஞர்கள் கட்சிக்கு வரும்போது உள்ளூரில் பணி செய்வதற்கான பதவியை கேளுங்கள், மாநில பொறுப்பை கேட்காதீர்கள். ஒரு ஆண்டில் சாதித்துக் காட்டுகிறேன் எனச் சொல்லி பதவி கேளுங்கள்.
25 ஆண்டுகளில் தேசிய தலைவர் ஆகலாம்: அப்படி உள்ளூரில் முதல் பதவியை பெற்று பணியாற்றினால் அடுத்த 25 ஆண்டுகளில் நீங்கள் தேசிய தலைவராக வரலாம். அடுத்த 500 நாட்களுக்கு உங்களுக்கு கடுமையான பணி இருக்கிறது. மாவட்ட தலைவர்கள் பலர் சொந்த பூத்தில் தோற்றிருக்கிறார்கள்.
சொந்த பூத்திலேயே தோல்வி: 66 பாஜக மாவட்டங்களில் 55 மாவட்ட தலைவர்கள் தங்கள் சொந்த பூத்களில் ஜெயிக்கவில்லை. நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். பாஜக மாநில நிர்வாகிகளில் வெறும் 14 சதவீதம் பேர் தான் சொந்த பூத்களில் ஜெயித்திருக்கிறார்கள். 86 சதவீத மாநில நிர்வாகிகள் தோற்றிருக்கிறார்கள்.
நான் சொல்வது உங்கள் நெஞ்சில் குத்த வேண்டும். நம் பூத்திலேயே ஜெயிக்கவில்லை, ஆனால் நாம் நிர்வாகியாக இருக்கிறோம் என வேதனைப்பட வேண்டும். வெறி வந்தால் தான் கட்சிக்கு வளர்ச்சி வரும். பழிச்சொல்லை பற்றி வருத்தப்படாதீர்கள். அவமானத்தைப் பற்றி கவலைப்படாதீங்கள். பதவி வரும் போகும், ஈகோ இல்லாமல் களத்திற்கு சென்று வேலை செய்யுங்கள்." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.
மேலும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது. மாநிலத்தில் எந்த கட்சியினர் மீதும் இல்லாத அடக்குமுறை பாஜ., மீது ஏவப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டு உள்ளார். திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாநிலத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. இது குறித்து பேசவும், உண்மையை சொல்லவும், எதிர்க்கவும் யாருக்கும் தைரியம் இல்லை. மீறி எதிர்த்தால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.
விஜய் பற்றி மறைமுகமாக: கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
நேரிடையாகவே விஜய் அரசியல் பேசி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விஜய்யுடன் கை கோர்க்க சில அரசியல் கட்சிகள் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் கட்சி என நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக "புதிய ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்" என செயற்குழுவில் அவரது கட்சியின் வருகை பற்றிப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications