இதென்ன கதை.. சீமான் கூட்டம் நடத்த அண்ணாமலை உதவி செய்தாராமே.. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி!
சென்னை: சீமானின் கூட்டத்திற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ரயில்வே அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்றுத் தந்ததாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சியில் ரயில்வேவுக்கு சொந்தமான ஜி கார்னர் திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் ஏராளமான நாதக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சீமான் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "திருச்சி ரயில்வே க்ரவுண்டில் நடைபெறும் சீமானின் நிகழ்ச்சிக்காக பாஜக Ex officer அண்ணாமலை ரயில்வே அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்றுத் தந்திருக்கிறார். அப்படியே மோடியிடம் Ex officer அவர்களை பேச சொல்லி இலங்கையை போர் குற்றவாளி நாடாக அறிவிக்க சொல்லுங்க பார்ப்போம் சீமான்" எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார் சீமான். மேலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் கிடையாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியை பாஜகவின் 'பி டீம்' என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சீமானின் இந்த பேச்சுகள் அவரை பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்று விமர்சிக்கும் கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.
எனினும், சீமான் தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் பாஜகவை தாக்கிப் பேசி வருகிறார். அதோடு, ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால், தான் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதையடுத்து, பாஜக எதிர்ப்பின் மூலம் சீமான் திமுகவிற்கு நெருக்கமாகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், சீமான் நடத்திய கூட்டத்திற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை ரயில்வே அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்றுத் தந்ததாக திமுகவின் முன்னணி நிர்வாகி ராஜீவ் காந்தி குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என நெட்டிசன்கள் அவரது பதிவில் கேட்டு வருகின்றனர். மேலும், நாதகவை சேர்ந்த பலர், ராஜீவ் காந்தி முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது பேசிய பேச்சுகளை பகிர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications