அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக்? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா?.. ஸ்கெட்ச் போட்டு நகரும் பாஜக
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே இந்த தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிகிறது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் பாஜக ஆட்சி நீடித்து வருகிறது. தற்போது 2024 ஆம் ஆண்டும் பாஜ வென்றால் ஹாட்ரிக் வெற்றியாக கொண்டாடப்படும்.

பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது
ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. இதனால் எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஒரு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளன. மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் இந்த முறை எப்படியாவது மத்தியில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தின் நிலவரம்
தமிழகத்தை பொருத்தமட்டில் பாஜகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் என்றால் அவை தென் மாவட்டங்கள்தான். தற்போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக வென்றுள்ளதால் மேற்கு மண்டலத்திலும் பாஜகவுக்கு குறைந்த அளவிலான செல்வாக்கு இருப்பதாக தெரிகிறது. இதை முழுமையாக வரும் 2024 தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது.

கோவை மக்களவை தொகுதி
கோவை மக்களவை தொகுதியை பாஜக கைப்பற்றுவதற்காக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக போராடி வருகிறார். கோவையில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஓடி போய் உதவுகிறார். தீபாவளி பண்டிகைக்கு முன்பு கோவை உக்கடம் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை மிகப் பெரிய அளவில் கொண்டு போய் அந்த விவகாரத்தில் போலீஸார் பல்வேறு தகவல்களை வெளியிடுவதற்கு முன்பே அண்ணாமலை பிரஸ்மீட்டில் சொல்லிவிட்டார்.

தேசிய தலைவர் ஜே பி நட்டா
அது போல் தமிழகத்திற்கு தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா எப்போது வந்தாலும் கோவைக்கே வருகிறார். அவருடைய கட்சி நிகழ்ச்சிகளையும் பெரும்பாலும் கோவையில் இருக்கும்படி பார்த்து கொள்கிறார். திமுக வலுவாக உள்ள தொகுதிகளை குறி வைத்து பாஜக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் பாஜக எந்த திமுக நிர்வாகியுடன் மோதுகிறார்களோ அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து வேட்பாளரை களமிறக்கவும் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதி எம்பி
அந்த வகையில் நீலகிரி தொகுதியின் எம்பியாகவும் அங்குள்ள பழங்குடியின மக்களுக்காகவே டெல்லியிலிருந்து எப்போது வந்தாலும் நீலகிரியில் உள்ள வீட்டில் தங்கி குறைகளை கேட்பவருமான ஆ ராசாவை எதிர்த்து பாஜக போட்டியிடவுள்ளது. நீலகிரி தொகுதி கிட்டதட்ட ஆ ராசாவின் கோட்டை எனலாம். அந்தளவுக்கு அவர் அங்கு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார்.

சனாதனம்
சனாதனம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி பரபரப்பை கிளப்பிய ஆ ராசாவை எதிர்த்து எல் முருகனை போட்டியிட வைக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காகத்தான் அவ்வப்போது எல் முருகன் ஊட்டிக்கு விசிட் அடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் ஜே பி நட்டா அடிக்கடி கோவை வருவதற்கான காரணமும் தெரிந்து விட்டது.

கோவை மக்களவை தொகுதி
அதாவது கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாம். வாட்ச் பில் வரல மல என கோவையில் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி உள்ளார். எனவே செந்தில் பாலாஜியின் வியூகத்தை முறியடித்து கோவையில் கால் பதிக்க பாஜக விரும்புகிறது.

திமுக வெர்சஸ் பாஜக
அதாவது திமுக வெர்சஸ் பாஜக என்பதை பேச்சளவில் இல்லாமல் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் ஆ.ராசா, செந்தில் பாலாஜி ஆகியோரின் பொறுப்பில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற போகிறது. அவ்வாறிருக்கையில் அதிமுக ஏற்கெனவே தங்களுக்கு வலுவாக உள்ள தொகுதிகளில் போட்டியிடவே முயற்சிக்கும். சென்னைக்கு பிறகு மிகப் பெரிய தொழில் நகரம் கோவைதான். எனவே இந்த தொகுதியை கைப்பற்ற அதிமுக முயற்சிக்கும். சட்டசபைத் தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றவே அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார்.

இரு முறை வென்ற திமுக
கோவை எம்பி தொகுதி மேற்கு மண்டலத்தில் மிகப் பெரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் இதுவரை திமுக இரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதிமுக ஒரு முறை வென்றுள்ளது. பாஜக இரு முறை வென்றுள்ளது. அது போல் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் கணிசமாக வென்றுள்ளனர். ஏற்கெனவே பாஜக இரு முறை வென்றுள்ளதால் இந்த முறை மக்கள் நிச்சயம் அண்ணாமலைக்கு வாக்களிப்பார்கள் என பாஜக தலைமை கருதுகிறதாம். இதனால் அதிமுகவிடம் கோவை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு பெற பாஜக முடிவு செய்துள்ளதாம். இதற்காக டெல்லி தலைமை அளவுக்கு அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோவை தொகுதிக்காக அடிமட்ட அளவில் அண்ணாமலை பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார் என்றும் தெரிகிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் எளிதாக கோவை மக்களிடம் செல்வாக்கை பெற்று விட முடியும் என்பதாலும் ஆளும் திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதாலும் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் கணக்கு போட்டு வைத்துள்ளாராம் அண்ணாமலை.. இவர் போட்ட கணக்கு சரியாக இருக்குமா என்பதை தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications