அண்ணாமலைக்கு பாஜகவில் புதிய பொறுப்பு.. தமிழக சக்தி கேந்திராவின் தலைவராக நியமிக்க வாய்ப்பு? பின்னணி
சென்னை: விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பதவி என்ன? அதன் பணி என்ன? என்பது பற்றி முக்கிய விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்காக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக வேகமாக வளர்ச்சியடைந்து வந்ததாகவும், ஆனால் கட்சி மேலிடம் அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலைக்கு தமிழக பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழக பாஜக சக்தி கேந்திராவின் தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவியை பாஜக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சேலத்துக்கு வருகை தர உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் சக்தி கேந்திரா என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. சக்தி கேந்திரா என்பது தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.
சக்தி கேந்திராவின் பணி என்ன?
குறிப்பாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் பணியை மையப்படுத்தி செயல்படும். தமிழகம் முழுவதும் இருக்கும் வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைக்கும் பணியை இந்த சக்தி கேந்திரா செய்யும். தமிழக பாஜகவில் மாநில, மாவட்ட மண்டல நிர்வாகிகளுக்கு கீழ் ஓட்டுச்சாவடிகளில் கிளை அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர்.
இதில், 3 வாக்கு சாவடிகளுக்கு ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி 3 வாக்குச்சாவடிகளுக்கான பொறுப்பாளராக இருப்பவர் தான் சக்தி கேந்திரா பொறுப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்.
25,000 ஆயிரம் பேர்
இவர்களின் பணி தங்களுக்கு கீழ் உள்ள வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து மக்களை அதிகளவில் தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும். இதனால், தான் பாஜகவில் சக்தி கேந்திரா பொறுப்பாளர் பதவி முக்கியமான ஒன்றாக உள்ளது.
தமிழக பாஜகவில் மொத்தம் 25 ஆயிரம் பேர் வரை சக்திகேந்திரா பொறுப்பாளர் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாநில சக்தி கேந்திரா தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு கிடைக்கும் பட்சத்தில் அவர் சக்தி கேந்திரா பிரிவில் பணியாற்றும் 25 ஆயிரம் பேரை கண்காணித்து ஆலோசனைகளை வழங்குவார்.
பதவி விலகியதால் புது பொறுப்பு
முன்னதாக அண்ணாமலைக்கு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நாகர்கோவில் மாவட்டம் பத்மநாபபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்று மொத்தம் 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
ஆனால் அதனை அண்ணாமலை ஏற்கவில்லை. தனது தந்தையின் உடல்நலம் சரியில்லாததால் அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டும். இதனால் 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்த முடிவை அண்ணாமலை அதிருப்தி காரணமாக எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அவருக்கு தமிழ்நாடு மாநில சக்தி கேந்திர தலைவர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications