ஆமா! பள்ளிக் கல்வித் துறை எதுக்கு? திமுகவின் தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்கவா? அண்ணாமலை கேள்வி
சென்னை: திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையை செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.

நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்களுக்குக் கணக்கே இல்லை. திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. அதுவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை. இந்தப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?
இடிந்து விழும் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஏற்கனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே இருக்கையில், தொடர்ந்து அரசுப் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவதன் பின்னணி என்ன? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இதே போல் கடந்த ஜூலை மாதம் கூடலூரை அடுத்த பந்தலூரில் பெய்த மழையில் தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை பறந்து அருகில் உள்ள வீட்டில் விழுந்து, அந்த வீட்டின் மேற்கூரையையும் சேதப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை மொத்தமாகப் பறந்து, அருகிலுள்ள வீட்டில் விழுந்து அந்த வீட்டின் கூரையையும் சேதப்படுத்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பகல் நேரத்தில், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இது போன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன், 10,000 புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம். அமைச்சர்கள் இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டினோம் என்று ஆளுக்கொரு கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மலைப் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை கூட, இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் சரி செய்யப்படவில்லை என்பதுதான் திமுக ஆட்சியின் உண்மையான அவல நிலை. இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications