கோமியம் உடலுக்கு நல்லது இல்லை.. அடித்து சொன்ன ஆய்வு முடிவுகள்! மூடநம்பிக்கையை பரப்புகிறாரா அண்ணாமலை?
சென்னை: மாட்டு கோமியம் குடிப்பது நல்லது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. பலரும் காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "சென்னை ஐஐடி இயக்குநர் அவர் சார்ந்த துறையில் பெரிய நிபுணர் அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு பற்றி குறை கூறக்கூடாது'' என்று கூறியுள்ள நிலையில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கு எதிராக பேசியுள்ளார்.
சென்னை ஐஐடியின் இயக்குநராக இருப்பவர் காமகோடி. கடந்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடந்த மாட்டு பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

கோ பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு விழாவில் காமகோடி பேசினார். அவரது பேச்சு தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அப்படி என்ன பேசினார்?.
அதாவது, காமகோடி ‛‛எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. ஒரு சந்நியாசி வந்து கோமியத்தை குடிக்க சொன்னார். அப்பா கோமியம் குடித்தார். 15 நிமிடத்தில் அவருக்கு ஜூரம் போய்விட்டது. பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறியது தான் சர்ச்சையானது.
இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை உள்பட பலரும் காமகோடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது:
‛‛சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இந்தியாவில் அவருடைய துறையில் பெரிய நிபுணர். அவர் சார்ந்த மதத்தின் மீது பற்று இருக்கிறது. அதில் தவறு கிடையாது. பசுமாட்டின் மீது நம்பிக்கை இருப்பது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு. அவர் வகுப்பறைக்குள் சென்று பாடம் எடுத்து நீங்க குடிங்க என்று சொல்வது கிடையாது. அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு பற்றி குறை கூறக்கூடாது. ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். அதேவேளையில் காமகோடி கூறியது தவறு என்பதை அண்ணாமலை கூறாமல் அது அவரது நம்பிக்கை என்று ஆதரவு தெரிவித்தார்.
அண்ணாமலை தற்போது பாஜக மாநில தலைவராக உள்ளார். ஆனால் அவர் கோமியம் குடித்தால் ஜுரம் குணமாகும் என்று கூறிய ஐஐடி இயக்குநர் காமகோடியின் பேச்சை கண்டிக்காமல் அது அவரது நம்பிக்கை என்று கூறியுள்ளார். இதன்மூலம் மூடநம்பிக்கையை அண்ணாமலை பரப்புகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மாட்டு கோமியம் என்பது மனிதர்கள் குடிப்பதற்கு உகந்தது இல்லை. அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் கால்நடை ஆய்வில் முதன்மையாக செயல்பட்டு வரும் பரேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute or IVRI) விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு என்பது போஜ் ராஜ் தலைமையில் 3 பிஎச்டி மாணவர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையின் முடிவு 2023ம் ஆண்டில் வெளியானது. Researchgate தளத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போஜ் ராஜ் கூறுகையில், ‛‛ பசு, எருமை, மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோமியத்தில் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளது. குறிப்பாக மனிதர்களுக்கு வயிறு சார்ந்த தொற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் Escherichia coli என்ற பாக்டீரியாக உள்ளது. கோமியம் என்பது மனிதர்கள் குடிக்க உகந்தது இல்லை
இந்த ஆய்வில் எருமையின் கோமியம் என்பது பசுவின் கோமியத்தை விட பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் கொண்டுள்ளது. ஏனென்றால் எருமையின் கோமியத்தில் S Epidermidis மற்றும் E Rhapontici என்ற பாசிட்டிவ்வான பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது'' என்று கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் ஒரு பொதுவான ஒரு எண்ணம் உள்ளது. பசுவின் கோமியத்தை குடித்தால் அது நோயை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த சூழலிலும் கோமியத்தை மனிதர்கள் குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுவது இல்லை. அதேவேளையில் சிலர் கோமியத்தை காய்ச்சி வடிகட்டி குடித்தால் பாக்டீரியா இருப்பது இல்லை என்று சொல்கின்றனர். அதுபற்றி நாங்கள் இன்னொரு ஆய்வை மேற்கொள்ள உள்ளோம்'' என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications