"பொதுவாக அண்ணன் மனசு தங்கம்" முரட்டுக்காளை பாட்டு பாடியதும் கன்னத்தில் குழி விழ சிரித்த அண்ணாமலை
சென்னை: "முரட்டுக்காளை" படத்தில் இடம் பெற்ற "பொதுவாக என் மனசு தங்கம்" பாடலை, "பொதுவாக அண்ணன் மனசு தங்கம்.." என சென்னை மணலியில் நடந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பாடியதும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
சென்னை மணலியை அடுத்துள்ள மாத்தூரில் நடந்த அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அண்ணாமலை பங்கேற்றார். அந்த விழாவில் ஒருவர், முரட்டுக்காளை படத்தில் ரஜினி கெட்டப்பில் தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு, கழுத்து நிறைய மாலைகளை அணிந்து கொண்டு வந்தார்.

அவர் மேடையேறி, ஒரு பாடல் பாடினார். அதாவது முரட்டுக்காளை படத்தில் இடம் பெற்ற "பொதுவாக என் மனசு தங்கம்" பாடலைத்தான் பாடியிருந்தார். அதில் வரிகளை மாற்றி "பொதுவாக அண்ணன் மனசு தங்கம், அண்ணன் வாரி வழங்குவதில் சிங்கம்" என பாடி வைப் ஏற்றினார்.
"அண்ணன் வாரி வழங்குவதில் சிங்கம்" என பாடியவுடன் அண்ணாமலையே "அய்யோ ஏம்ப்பா இப்படியெல்லாம்" என்பது போல் அதிர்ச்சியாக பார்த்தார். பின்னர் "ஆடுவோம், பாடுவோம்" என்ற கோரஸ்ஸை அங்கிருந்த நிர்வாகிகளும் பாடினர்.
அப்போது அண்ணாமலை அந்த பாடல் பாடிய நபரை தட்டி கொடுத்து பாராட்டினார். இந்த பாடலை சாதாரணமாக கேட்டாலே ஆட்டம் போட தோன்றும். ஆனால் இந்த பாடலை கைதட்டலுடன் கேட்டதால் நிர்வாகிகள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "திமுக நடத்திய முப்பெரும் விழாவை பார்க்கும் போது பாவமாக தோன்றியது. 8 ஆண்டுகளுக்கு முன்பு திருடர் என கூறியவரை இன்று ஸ்டாலின் புகழ்ந்து பேசுகிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வி அடைவார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியது சரித்திர உண்மை. அமித்ஷா உறுதியளித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜகவினர் பாடுபடுவோம். உள்துறை அமைச்சருடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு அதிகாரப்பூர்வமானது.
வெளியில் வந்த போது முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துடனான எனது நட்பு எப்போதும் தொடரும். விரைவில் இருவரையும் சந்தித்து கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுப்பேன்.
விஜய் பிரச்சாரத்திற்கு கூட்டம் கூடுவது நல்லதே. ஆனால் பொதுச் சொத்துகளுக்கு சேதம், பொதுமக்களுக்கு இடையூறு வரக் கூடாது. அதற்கான பொறுப்பு விஜய்க்கு அதிகம் உண்டு.
தலைவர் பதவியில் இல்லாததால் வேலைப்பளு குறைந்துள்ளது. நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட போகிறேன். பாஜக தொண்டனாக நான் எப்போதும் பெருமையோடு பயணிக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications