அண்ணாமலை போட்டாரே பாருங்க ஒரே போடு.. எடப்பாடியை முதல்வராக்கவா நாங்கள் இருக்கிறோம்? முடியாது.. தடாலடி
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என நான் எப்படி கூற முடியும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சினைகள் இருக்கும் என்பது சகஜம்தான்.

அடிப்படையில் கொள்கை ரீதியாக கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன. அதிமுக எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாங்கள் இறங்கி போக முடியாது. அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கலாம். நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை.
என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எனது அரசியல் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். தமிழக பாஜகவுக்கும் சரி எனக்கும் சரி அதிமுகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை. அதே வேளையில் மத்தியில் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்றும் தமிழகத்தில் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமியை ஆக்குவோம் என செல்லூர் ராஜு அண்ணன் சொல்கிறார். இதை நான் எப்படி சொல்ல முடியும்.
மத்தியில் பிரதமர் சரி, மாநிலத்தில் எடப்பாடியை முதல்வராக்குவோம் என நான் சொல்ல முடியாது. இதை தேசிய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறி பதவிக்கு வந்த நான் எடப்பாடி முதல்வராவார் என எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தன்னுடயை முக்கிய நோக்கமே நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என்பதுதான். இதை யார் எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி, இதை அதிமுக ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் விமர்சித்திருந்த நிலையில் கடந்த வாரம் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்திருந்தார். இதனால் அதிமுக நிர்வாகிகள் கொந்தளித்து போய்விட்டனர். இதையடுத்து அண்ணாமலையை 3ஆம் தர நிர்வாகி என்றும் அவருக்கு தலைவராக இருக்கவே தகுதி இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது கட்சியின் முடிவு என அறிவித்திருந்தார். அத்துடன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக நிர்வாகிகள் நாராயணன் திருப்பதி, கருப்பு முருகானந்தம், கரு நாகராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் வரலாறே இல்லாதவர்கள் வரலாறு பற்றி பேசும் போது தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன. தலைவராக வர நினைப்பவர்களுக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவையெல்லாம் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவுடனான கூட்டணி குறித்து எங்கள் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என்றும் நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. திமுகவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது. நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். மோடி மீண்டும் பாரத பிரதமராக வருவார்., தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வரவேண்டும், பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் அண்ணாமலையும், அதிமுகவுடன் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கூறியிருந்தார். செல்லூர் ராஜூ அண்ணன் கூறியது போல் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும். ஆனால் தமிழக முதல்வராக எடப்பாடி வருவார் என நான் எப்படி கூற முடியும்., இதை தேசிய தலைமைதான் சொல்ல வேண்டும். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறி நான் தலைவர் பதவிக்கு வந்துள்ளேன், அப்படியிருக்கும் போது வேறு ஒருவர் அடுத்த முதல்வர் என நான் எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications