அவதூறு வழக்கால் அண்ணாமலைக்கு காத்திருக்கும் சிக்கல்.. ஜூலை 14ஆம் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவு!
சென்னை: தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சொத்துப்பட்டியல் அவதூறாக வெளியிடப்பட்டு இருப்பதாக கூறி திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு அடுத்தடுத்து நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து, எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள தனக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மரியாதையும் உள்ளது, அதை களங்கப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என குற்றம்சாட்டி இருந்தார் டி.ஆர்.பாலு,
மேலும், எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார் டிஆர் பாலு.
இந்த மனு மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது சைதை நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications