ஏறு முகத்தில் அண்ணாமலை; இறங்கு முகத்தில் எடப்பாடி? பாஜக வளர்ச்சி யாருக்கு ஆபத்து?
சென்னை: எடப்பாடி பழனிசாமியைவிடப் பெரிய கூட்டணியை அண்ணாமலை தமிழக அரசியலில் உருவாக்கி உள்ளார்.
பாஜக கூட்டணி கிட்டத்தட்ட முழுமையான நிலையை அடைந்திருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாஜக, இன்றைக்குத் தமிழ்நாட்டில் தனது தலைமையிலான கூட்டணியை உருவாக்கி உள்ளது. அந்தவகையில் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இது மிகப்பெரிய ஆதாயம்.

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு பாஜக தலைமையிலான கூட்டணிக்குள் பாமக சென்றுள்ளது. அதைப் போல் அதிமுகவை உடைத்து உருவான டிடிவி தினகரன் இன்றைக்கு இதே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புதிய நபராக உள்ளே சென்றுள்ளார்.
வழக்கம் போல எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாகவும், மத்தியில் தனக்கு ஆதரவான ஒரு அரசியல் சக்தி தேவை என்பதற்காகவும் ஒபிஎஸ் பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளார்.
தமிழ்நாட்டில் தனிக் கட்சியாக 16 ஆண்டுகளாக இயங்கி வந்த சரத்குமார், தனது கட்சியையே பாஜகவுடன் இணைத்திருக்கிறார். கூடவே திமுக அணியில் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆக இருந்த பாரிவேந்தர், அவரது வெற்றிக்குப் பிறகு சில ஆண்டுகளாகவே பாஜக கூட்டணியில் தொடர்ந்து வருகிறார்.

இவர்களைத் தவிர, ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சி ஏசி சண்முகம், மூப்பனாரின் மகன் ஜிகே வாசன் என ஒரு கலவையான கூட்டணியை பாஜக தமிழ்நாட்டில் தனது தலைமையில் கட்டி எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவுக்குத் தொண்டர்களே இல்லை என்று கிண்டல் செய்யப்பட்டு வந்த பாஜக, இன்று தனது தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியை உருவாக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால், அது அந்தக் கட்சிக்கு ஒரு வளர்ச்சியைத் தந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
கூடவே தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே 'என் மண் என் மக்கள்' என்ற யாத்திரையை அண்ணாமலை தொடங்கி, பரவலாக பாஜக பற்றிய ஒரு பேச்சைத் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறார். விவாதங்களில் அவரது கருத்துகள் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை உண்டாக்கி உள்ளது.
அண்ணாமலை அரசியலுக்குப் புதியவர். அவரது ட்ராக் ரெக்கார்ட் காவல்துறை வட்டாரத்தில் கிடைத்த அனுபவங்களை மட்டுமே பேசுகின்றன. அதுவும் தமிழ்நாட்டை அடுத்துள்ள கர்நாடகாவில் அவரது பணிக்காலம் பல ஆண்டுகள் இருந்துள்ளது.

அனுபவத்தால், அவர் கர்நாடகாவைத்தான் தமிழ்நாட்டை விட அதிகம் புரிந்து வைத்திருந்தார். அப்படி இருந்தும் அவர் தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்து பாஜகவை வளர்த்திருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் 2021 ஆம் ஆண்டுதான் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதாவது 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசியலில் இயக்கு சக்திகளில் ஒருவராக இருந்து வந்த மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதம் கழித்து அண்ணா மலை பாஜகவின் மாநிலத் தலைவரானார். அதாவது 2021 மே மாதம் 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் ஸ்டாலின்.
ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை 1967இல் தொடங்கியது. அவருக்கு அப்போது 14 வயது. 1973இல் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். சரியாக 48 ஆண்டுகள் கழித்து முதல்வராகப் பதவி நாற்காலியில் அமர்ந்தார். இவருடன் ஒப்பிடும்போது அண்ணாமலையின் அரசியல் வயது 2 ஆண்டுகள்தான்.
திமுக தொடங்கப்பட்டது 1947. இந்தியாவில் உள்ள பழமையான கட்சிகளில் திமுகவும் ஒன்று. அந்தக் கட்சிக்கு 76வயது ஆகிறது. இவ்வளவு பெரிய அரசியல் பாரம்பரியம் உள்ள ஒரு மாநிலக் கட்சியை, அண்ணாமலை தனது 2 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தால் அசைத்துப் பார்த்திருக்கிறார்.
அவரது அரசியல் வாழ்வின் மிகப்பெரிய வெற்றி தனது அரசியல் எதிரியான செந்தில் பாலாஜியைத் தூக்கியது. அதற்கு மத்திய அரசின் பலம் உதவி இருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஸ்கெட்ச் போட்டு வேலை செய்தால்தான் அரசியல். அதை அண்ணாமலை 2 வருடங்களில் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

அவரது அரசியல் கருத்துகளில் இன்னும் முதிர்ச்சி வரவில்லை என்பது ஒரு பக்கம் உள்ள விமர்சனம். அதுவும் ஏற்கத்தக்க விமர்சனம். 2 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள அண்ணாமலை பத்திரிகையாளர்களைக் கையாண்ட விதம் கண்டனத்திற்கு உரியது. அதைப் பத்திரிகையாளர்களே பல சமயம் வெளிப்படுத்தி உள்ளனர்.
அதன் பின்னால் அண்ணாமலைக்கு எதிராக ஸ்டிங் ஆபரேஷன் பெரிய அளவில் அவரது தலை உருண்டது. அதைப்போலவே செந்தில் பாலாஜி, இவர் மீது வைத்த முறைகேடாக வாங்கிய ரஃபேல் வாட்ச் விவகாரத்தில், அண்ணாமலை அம்பலப் பட்ட விதம் எல்லாம் அவருக்கு மிகப் பெரிய பின்னடைவை உண்டாகின.
குறிப்பாக அவரது வீட்டு வாடகை குறித்து எழுந்த புகாருக்கு அவர் அளித்த மழுப்பலான பதில் பலரையும் அவரைப் பற்றி யோசிக்க வைத்தது. ஊழலை எதிர்க்கும் ஒருவர், ஊழலில் ஒரு பகுதியாக உள்ளாரோ என்று மக்களிடம் சந்தேகம் எழுந்தது.
இத்தனை பின்னடைவுக்குப் பிறகும் அவர் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது உண்மையில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், அந்தக் கட்சி மீது ஊழல் புகார்களைக் கூறி ஆளுநரிடம் பெரிய டிரங்க் பெட்டியில் கொண்டு போய் அதற்கான ஆவணங்களைக் கொடுத்த அவர், அதே வேகத்தில் அதிமுகவைப் பகைத்துக் கொண்டு அரசியல் செய்யத் தொடங்கினார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அண்ணாமலை பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து ஆவணங்களை ஆளுநரிடம் கொடுத்த போது அதில் அவரது அரசியல் முதிர்ச்சி வெளிப்படவில்லை. ஒரே நொடியில் அது காமெடியாக காட்சி தந்தது. இவை எல்லாம் அண்ணாமலை சறுக்கிய இடங்கள்.
இத்தனை காமெடிகள் மத்தியில் இன்று தமிழக பாஜக தனது தலைமையில், ஒரு கூட்டணியை உண்டாக்கி உள்ளது என்றால், அது அண்ணாமலையின் ஏறு முகத்தையே காட்டுகிறது.
முதலில் ஒரு கூட்டணி என்றால், அதற்காக ஃபேஸ் வேல்யூ இருக்க வேண்டும். அந்த வேல்யூவை அண்ணாமலை கிட்டத்தட்டக் கொண்டு வந்துவிட்டார். பல சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் பாஜக கூட்டணியில் உள்ளனர். ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனும் முக்குலத்தோர் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.
அதைப் போல் நாடார் மக்களின் முகமாக சரத்குமார் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய சாதிகளில் ஒன்றாக வன்னியர்களின் ஆதரவு பெற்ற பெரிய கட்சியான பாமக உள்ளது. அதற்கு மாறாக ஜான் பாண்டியன் தனது சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய சமூகத்தை அடையாளப்படுத்தும் ஜி.கே.வாசன் இருக்கிறார். முதலியார் சமூகத்தின் அடையாளமாக நீதிக்கட்சி சண்முகமும், உடையார் சமூகத்தை முன்னிறுத்தும் ஐஜேகே பாரிவேந்தரும் உள்ளனர்.
ஒரு காலத்தில் இதைப்போன்ற சாதிய கட்சிகளைத் திரட்டி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கூட ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கினார். அதையே இத்தனை ஆண்டுகள் கழித்து அண்ணாமலை செய்திருக்கிறார்.
இந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா என்றால், அது சந்தேகம் தான். ஆனால், அதிமுகவைவிட வலிமையான கூட்டணியை அண்ணா மலை உருவாக்கி விட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு அரசியலில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அவரையே அண்ணாமலை பின்தங்க வைத்து விட்டார்.
அதில் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications