வாசன் வந்துவிட்டார்.. வெற்றிக் கூட்டணியாக மாறிவிட்டது பாஜக.. அண்ணாமலை புளகாங்கிதம்
சென்னை: லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி வெற்றி பெற தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி அமைப்போம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறிய அண்ணாமலை, சாதனைகளை சொல்லி தமிழ்நாட்டில் வாக்கு சேகரிப்போம் என்று தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதற்காக கூட்டணி கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது பாஜக.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் பிரிவு ஏற்பட்ட பிறகு தேமுதிக, பாமக, சமக, தமாகா உள்ளிட்ட பல கட்சிகள் எந்த கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் முதல் ஆளாக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார் ஜி.கே. வாசன். அது குறித்த உறுதியான அறிவிப்பை வெளியிட்ட ஜி.கே. வாசன், நாளை பல்லடத்தில் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே கூட்டணிக்கு வந்துள்ள ஜி.கே.வாசனுக்கு வாழ்த்து கூறினார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜி.கே.வாசன்.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு வெற்றி கூட்டணியாக மாறி வருகிறது. இரு கட்சிகள் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும்.
எங்கள் கூட்டணியை வலிமையான கூட்டணியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். பிற கூட்டணி கட்சிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. மூன்றாவது முறையாக மோடி தலைமையான பாஜக ஆட்சி அமைய கூட்டணியை வலிமையாக மாற்ற வேண்டும். மோடி அரசின் சாதனைகளைச் சொல்லி தமிழ்நாட்டில் வாக்கு சேகரிப்போம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு வாசன் எங்கேயும் சென்றதில்லை. பெரிய மாற்றத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டு இருக்கிறது. கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.'












Click it and Unblock the Notifications