5 மணியா? 6-ஐ தாண்டிடுச்சே.. அண்ணாமலை சொன்னது என்னாச்சு? பெரிய தலை எங்கே? கதவை தட்டும் நெட்டிசன்கள்!
சென்னை: மாலை 5 மணிக்கு பாருங்கள்.. முக்கிய விக்கெட் விழப்போகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வந்தது. ஆனால், மணி 6-ஐ கடந்துவிட்ட நிலையில், பாஜக தரப்பில் எந்த அப்டேட்டும் இல்லாததால் பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண் என் மக்கள் வெற்றி விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.

அண்ணாமலை அளித்த பேட்டி: இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "232 தொகுதிகளில் என் மண் எண் மக்கள் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது. பல்லடத்தில் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும். அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
மற்ற கட்சி தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். ஆனால் நாங்கள் தலைவர்களை இழுக்கிறோம். கூட்டணி பங்கீடு குறித்து திமுக பேசி வருவது என்பது திமுக வார்ம் அப் செய்து கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியாளர் யார் என்பது தெரியும்.
பிக் ஷாட்: எல்லா உழைப்பையும் போட்டு விட்டோம். விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது. நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். பிக் ஷாட்டுகள் உள்ளன. நாளை 5 மணிக்கு பாருங்கள், நல்லா இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார் அண்ணாமலை.
அண்மையில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள், ஒரு திமுக முன்னாள் எம்.பி ஆகியோர் டெல்லிக்குச் சென்று பாஜகவில் இணைந்தனர். அதைத்தொடர்ந்து, விளவங்கோடு சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.
இன்று மாலை 5 மணிக்கு: இப்படியான சூழலில், இன்று 5 மணி வரை காத்திருங்கள் என அண்ணாமலை பொடி வைத்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது. அண்ணாமலை சொன்னபடி, இன்று மாலை 5 மணிக்கு என்ன நடக்கப் போகிறது? மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பெரிய தலைகள் யாரும் பாஜகவில் இணையப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
பெரிய தலைகள்: அதிமுகவில் இருந்து சில முன்னணி நிர்வாகிகள், பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வட்டமடித்து வருகின்றன. கோவையைச் சேர்ந்த முன்னாள் மேயர் ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தான் அண்ணாமலை சூசகமாக குறிப்பிட்டுள்ளாரா அல்லது இன்னும் பெரிய தலைகள் யாராவது பாஜகவுக்கு டைவ் அடிக்கப் போகிறார்களா? என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடக்கின்றன.
பரபரப்பைக் கிளப்பி விட்ட அறிவிப்பு: ஒருபக்கம், தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுகவும், பாஜகவும் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. அப்படி, பாஜக கூட்டணியில் ஏதாவது கட்சி இணையப்போகிறதா என பல்வேறு பக்கங்களிலும் யூகங்கள் உலவுகின்றன.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராகி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. பல்வேறு குழப்பமான சூழல்கள் உள்ள நிலையில், அண்ணாமலையின் '5 மணிக்கு பாருங்கள்' என்ற அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது.
மேலும், பாஜக தொழில் பிரிவு மாநில துணைத் தலைவரான செல்வக்குமார், அண்ணாமலை, 5 மணி என குறிப்பிடும் கடிகாரத்தை கையில் வைத்தபடி காத்திருப்பது போன்ற கார்ட்டூனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். அப்படி 5 மணிக்கு என்னதான் நடக்கப்போகிறதோ என அலாரம் வைத்து காத்திருக்கிறார்கள் பாஜக தொண்டர்கள்.
6 மணி ஆச்சே: 5 மணிக்கு பாருங்கள் என பாஜகவினர் பில்டப் ஏற்றி வந்தனர். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும், இன்னும் கொஞ்ச நேரம் தான், பொறுமையா இருங்க எனக் கூறி இருந்தார். இந்நிலையில், 6 மணியைக் கடந்தும் தற்போது வரை பெரிய தலைகள் யாரும் பாஜகவில் இணைந்ததாக தகவல் இல்லை. மணி ஆச்சு, இன்னும் அண்ணாமலை சொன்னமாதிரி ஒண்ணும் நடக்கலையே என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications