அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்!
சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி புதிய இயக்கத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், உண்மையில் இது புதிய இயக்கம் எல்லாம் கிடையாது, பாஜகவின் இன்னொரு கிளைதான் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பாஜகவின் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தார். அவர் இருந்த காலத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர். குறிப்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், அவரது பேட்டிகள் முழுக்க முழுக்க திமுக எதிர்பாகத்தான் இருந்தது.

திமுக எதிர்ப்பு
அதிலும், திமுக ஆட்சியில் ஊழல்கள் அதிகம் நடந்திருப்பதாகவும், அதை வெளியில் கொண்டு வருகிறேன் என்றும் பல ஃபைல்களை வெளியிட்டிருந்தார். அந்த ஃபைல்களை, பையில் போட்டு ஆளுநரிடமும் கொடுத்து சலசலப்பை கிளப்பியிருந்தார். அண்ணாமலை பிரஸ் மீட் என்றாலே திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு என்கிற அளவில் இருந்தது.
ஓரம் கட்டப்பட்ட அண்ணாமலை
ஆனால், காலம் வேகமாக சுழன்றது. கட்சி பொறுப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார் அண்ணாமலை. காரணம் அதிமுக குறித்து அவர் பேசிய வார்த்தைகள்தான். எடப்பாடி பழனிசாமியை ஏகத்துக்கும் வறுத்தெடுத்திருந்தார். இதனால் மீண்டும் எடப்பாடியை கூட்டணிக்கு கூப்பிட போகும்போது, பாஜக-அதிமுக உறவுகள் அவ்வளவு ஸ்மூத்தாக இருக்கவில்லை. இப்படியாக அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெடிக்க.. அவர் கட்சிக்குள்ளேயே கரைந்து போனார்.
எந்த பதவியும் இல்லை
வழக்கமாக தமிழக பாஜகவின் தலைவர்களாக இருந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர், ஆளுநர் என உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதில் அண்ணாமலை மட்டுமே விதி விலக்கு. அவ்வளவு ஏன், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட கட்சி தலைமை அவருக்கு சீட் கொடுக்கவில்லை. எனவே கடுப்பான அவர், கட்சியை விட்டு விலகும் நிலையில்தான் இருந்தார்.
பாஜக தலைமையின் ஆசீர்வாதம்
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர் நிதின் நபி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என அனைவரையும் சந்தித்து, தான் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். கட்சியிலிருந்து விலகியவர்கள் யாரும் இப்படி போய்.. தலைவர்களை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக வரலாறே இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சர்கள்.
ஜென் ஸி அரசியல்
இதனை தொடர்ந்து பதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார். இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் அரசியல் தலைவர்களும் கெத்தாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒரு பிரிவினர் விஜய் பக்கம் இருக்கிறார்கள் என்றால், இன்னொரு பிரிவினர் உதயநிதி ஸ்டாலின் பக்கம் இருக்கிறார். இதை உணர்ந்துதான் தனக்கு இருக்கும் ஆதரவை அரசியல் ஆதரவாக மாற்ற அண்ணாமலை முயற்சிக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர்.
அண்ணாமலை மாநில தலைவராக இருந்த காலத்தில் அந்த அளவுக்கு திமுக எதிர்ப்பை விதைத்துவிட்டு சென்றார். விஜய் அதை அறுவடை செய்துதான் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
இன்னும் சிலரோ, அண்ணாமலையை கட்சி தலைமை கண்டுக்கொள்ளவில்லை. எனவே கட்சியின் கவனத்தை ஈர்க்க, தன்னுடைய பலத்தை காட்ட.. புதிய இயக்கத்தை அண்ணாமலை வேறு வழியின்றி தொடங்கியிருக்கிறார் என்றும் கூறியிருக்கின்றனர்.
பாஜகவின் கிளை
ஆனால், இதெல்லாம் சும்மா கதை! அண்ணாமலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆள்! அவர் ஒரு முடிவு எடுக்கிறார் எனில், அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு இருக்கும். அந்த அமைப்பின் அறிவுறுத்தலின்படிதான் தற்போது புதிய அமைப்பை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார். இது பாஜகவின் இன்னொரு கிளை அமைப்பு.. அவ்வளவுதான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அண்ணாமலை, பாஜக தலைமையை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அப்படியெனில், அவரது செயல்பாடு எப்படி பாஜக எதிர்ப்பாக இருக்க முடியும்? என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications