நடிகைகளையும், ரவுடிகளையும் சேர்த்துக் கொண்டு.. காதில் பூ சுத்துகிறார் முருகன்.. நர்மதா அட்டாக்!
பாஜகவுக்கு எதிராக அண்ணாநகர் நர்மதா போராட்டம் நடத்தினார்
சென்னை: தமிழக பாஜக தலைவரின் வேல் யாத்திரையை கண்டித்து அண்ணாநகரை சேர்ந்த நர்மதா நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நர்மதா.. 38 வயசாகிறது.. சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார்.. இவர் ஒரு சமூக ஆர்வலர்.. இவர் முன்னெடுத்துச் செல்லும் போராட்டங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுவுக்கு 2 வருஷங்கள் பணி நீடிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருத்தணி முருகன் கோவிலில், காவடி எடுத்தார்.

பொன் மாணிக்கவேல்
அச்சு அசல் பொன் மாணிக்கவேல் போலவே கெட்டப் போட்டு கொண்டு இந்த காவடியை எடுத்தார். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்குள் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். அதிலிருந்து இவர் பெயர் "நண்டு நர்மதா" என்றாகி விட்டது..

பாஜக
இவர் சமீப காலமாக பாஜகவுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.. கோயம்பேட்டில் உள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வீட்டின் முன்பும் கட்சி கொடியை தூக்கில் தொங்கவிடும் போராட்டத்திலும் ஈடுபட்டு கைதானார். பிறகு அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போலீசாரை கண்டித்து பாவாடை மாட்டும் போராட்டம் நடத்தியவர்.

மல்லிகைப்பூ
இந்த போராட்டம் எல்லாமே இவர் தன்னிச்சையாகவே செய்வதாகும்.. யார் தூண்டுதலும் கிடையாது.. இன்று இன்னொரு போராட்டத்திலும் ஈடுபட்டார்.. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் வெற்றிவேல் யாத்திரையை கண்டித்து இந்த போராட்டத்தில் நர்மதா ஈடுபட்டார். அண்ணாநகர் பெரிய தெருவில் உள்ள சேக்கிழார் மணிமண்டபம் முன்பு, தனது காதில் தானே மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் செய்தார்.

வேல் யாத்திரை
வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் தமிழர்களின் காதில் பாஜக தலைவர் எல்.முருகன் பூ சுற்றுவதாகவும், இந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அப்போது நர்மதா வலியுறுத்தினார்.. மேலும் சினிமா நடிகைகளையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக்கொண்டு முருகன் ரவுடியிசத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் நர்மதா குற்றஞ்சாட்டினார்.

சிறுபான்மையினர்
இதற்கு அனுமதி அளித்தால் அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்த நர்மதா, சேக்கிழாருக்கு தமிழக சட்டபேரவையில் சிலை வைக்க வேண்டும், தெய்வ புலவர் சேக்கிழாருக்கு பாஜக எதுவுமே செய்யவில்லை என்று கூறினார். தன்னுடைய காதில் தானே பூவை சுற்றி கொண்டு, போராட்டம் செய்து கொண்டிருந்த நர்மதாவின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications