தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் வாழுங்கள்.. "குழந்தைகளுக்கு" அன்னபூரணி சொற்பொழிவு!
சென்னை: தாமரை இலை தண்ணீர் போல வாழுங்கள் என அன்னபூரணி பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அன்னபூரணி தனது யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய போது அவர் பேசுகையில் ஆன்மீகத்தில் எது பற்றற்ற தன்மை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது என்னவென தெரியாமல் எதையோ செய்துவிட்டு வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள்.
பற்று என்றால் நீங்கள் ஒன்றை பிடித்துக் கொண்டிருப்பதற்கு பெயர்தான் பற்று. பற்றற்ற தன்மை என்றால் விடுபட்ட தன்மையில் இருப்பது. ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு விரக்தியில், வெறுமையில் இருக்கிறது- இவைதான் பற்றற்ற தன்மை என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்லது கெட்டது
தவறான புரிதலால் அவர்களது வாழ்க்கையே தவறாக சென்றுவிடுகிறது. இதற்கு உதாரணங்களை பார்ப்போம். ஒருவர் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் அவர் கலந்து கொள்வதே இல்லை, முக்கியமாக முடிவு எடுக்கும் விஷயங்களிலும் அவர் கலந்து கொள்வது இல்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டால் நான் பற்றற்ற தன்மையில் இருக்கிறேன் என்பார். குடும்ப விஷயங்களில் தலையிட்டால் பற்று வந்துவிடும் என்பதால் நான் எதிலும் ஈடுபடுவதில்லை என்கிறார்.

காவி உடை
இன்னொருவர், குடும்பத்தில் இருக்கிறார், ஆனால் காவி உடை உடுத்தியிருக்கிறார். காரணம் என்னவென்றால் துறவு வாழ்க்கை வாழ வேண்டுமானால் குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டு எங்கோ போய் வாழ வேண்டும் என அவசியம் இல்லை என கூறிகொண்டு வீட்டுக்குள் தனி அறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இருப்பதும் சாப்பிடுவதும் குடும்பத்தில்தான் என்ற போதிலும் அவர் எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. கேட்டால் நான் பற்றற்ற தன்மையில் இருக்கிறேன் என்கிறார்.

பற்றற்றத் தன்மை
அடுத்ததாக இன்னொருவர், குடும்பத்தில் இருந்தால் எப்படியும் நமக்கு பற்று வந்துவிடும். அந்த பற்றை அறுக்க முடியாது. அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் துறவு வாழ்க்கை வாழ வேண்டும். அதனால் கண்காணாத இடமான காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறேன். இதுதான் பற்றற்ற நிலை என்கிறார். இதுதான் ஆன்மீகம், இதுதான் துறவு வாழ்க்கை என்கிறார். உண்மையிலேயே இந்த 3 பேர் செய்வது பற்றற்ற தன்மையா என கேட்டீர்களேயானால் நிச்சயமாக இல்லை.

ஆணவத்தின் விளையாட்டு
இவர்கள் செய்வதெல்லாமே ஆணவத்தோடு விளையாட்டு. இந்த பற்றற்ற தன்மையை உங்கள் முயற்சியாலோ இல்லை பயிற்சியாலோ கொண்டு வர முடியாது. உங்களின் உருமாற்றத்தால் அது தானாகவே நிகழும். நீங்கள் அறிவை சரியாக பயன்படுத்தி நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம், மறுபடியும் எங்கே செல்ல போகிறோம் உள்ளிட்ட தெளிவான சிந்தனையை கொண்டு வந்து அதிலேயே ஊறி உப்பி அறிவின் உச்சமாக எதுவும் நிலை இல்லை என்பதை உணர வேண்டும்.

உள்வாங்குங்கள்
எனவே புரிந்து கொண்டு யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டால் பற்றற்றத் தன்மையில் நீங்கள் இருப்பீர்கள். கார், பங்களா, சொத்து, சுகம் ஆகியவை உங்களிடம் இருந்தாலும் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானால் நடக்கலாம், எந்த நேரத்திலும் எந்த மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம் என்ற விஷயத்தை உள்வாங்கி இருக்கும் போது அதெல்லாம் உங்களை விட்டு போனாலும் நீங்கள் கலங்க மாட்டீர்கள். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது பற்று கிடையாது. உங்கள் உள்தன்மையில் அது பற்று ஆகவே முடியாது. நீங்கள் பற்றற்றத் தன்மையில்தான் இருக்க முடியும். அதுவே உங்களை வேலி மாதிரி காக்கும். பற்றாக வேண்டும் என நினைத்தால் கூட உங்களால் பற்றாக முடியாது. எப்படி தாமரை இலையில் தண்ணீர் உருண்டு ஓடுகிறோ, உருண்டு ஓடினாலும் ஒட்டாமல் இருக்கிறதோ அது போல் நீங்க உலகத்துடன் விளையாட ஆரம்பித்துவிடுவீர்கள். எல்லா இன்பங்களையும் அனுபவித்து கொண்டாடி மகிழ ஆரம்பித்துவிடுவீர்கள். அந்த பற்றற்ற தன்மை என்பது உங்களின் அடித்தளமாக இருந்து கொண்டே இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications