போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழக அரசு.. சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ. 6 கோடியே 75 லட்சத்து 73 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவுப்பு ஆணை வெளியிட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதன்படி, திட்டமிட்டபடி இன்று போராட்டத்தை தொடங்கினர்.

முன்னதாக இரண்டு முறை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. நேற்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மக்களின் இடர்பாடுகள் கருதி போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து ஊழியர்களுக்கான சாதனை ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.
குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில். 2023-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்:
151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும். 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத் தொகை" வழங்கப்படும்.
இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குரைத்துக் கழகங்களில், பணிபுரியும் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து லட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications