தமிழகத்தில் வேகமெடுக்கும் தடுப்பூசி பணிகள்.. சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 1.4 லட்சம் கோவாக்சின் டோஸ்கள்
சென்னை: தமிழகத்திற்கு தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த உதவும் வகையில் மேலும் 1.4 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டன.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக அமலிலிருந்த ஊரடங்கு காரணமாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாகச் சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது.
மறுபுறம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி பணிகளையும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகள், தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுடன் இணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இதனால் தடுப்பூசிகளின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் மத்திய அரசு போதுமான தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை என்றும் கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், இன்று காலை ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் 12 பார்சல்களில் கோவாக்சின் தடுப்பூசி சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. அதில் சுமார் 1.40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் இருந்தன.
12 பார்சல்களில் வந்த 350 கிலோ எடையுடைய இந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனர். இவை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தடுப்பூசி விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும்.